தூத்துக்குடி: தேர்தலுக்காக அரசு பணத்தை கொடுத்து மக்களை விலை பேசுவதா? என திமுக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தாளமுத்துநகரில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இந்திய அரசியலில் மோடியின் ஆட்சியில் எல்லா துறையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவை பாதுகாக்க தியாகம் செய்தவர்கள் மத்தியில் மோடி ஒரு துரும்பை கூட எடுத்து போட்டதில்லை. கள்ளப்பணத்தை ஒழிப்பேன், கருப்பு பணத்தை மீட்பேன் என்று கூறிவிட்டு இரண்டாயிரம் ரூபாயை அச்சடித்தது யாருக்காக? அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ், பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளதை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் 13 பேர் பலியானதற்கும், கஜா புயல் பாதிப்பிற்கும் பிரதமர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. வெட்கம் இல்லையா? ஜாதி, மதத்தால் வெற்றி பெறலாம் என்ற பாஜ திட்டம் தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் எல்லாத்துறையும் பாழ்பட்டு கிடக்கிறது. ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தேர்தலுக்காக நேரடியாக இல்லாமல் அரசு மூலமாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டு மக்களை விலை பேசுகின்றனர். சந்தர்ப்பவாத அதிமுக, பாமக கூட்டணி நாற்பது இடங்களிலும் தோற்கும். சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் 300 பேர் இறந்ததாக கூறும் அரசு அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டாமா? ஜிஎஸ்டியால் எல்லா தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி