×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஊட்டி : நீலகிரி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர்,மேட்டுபாளையம், பவானிசாகர் மற்றும் அவினாசி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்ட அனைத்தும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் பலத்த பாதுகாப்புடன் நீலகிரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டது.

இங்கு காவல்துறையினர், துணை ராணுவத்தினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஸ்ட்ராங் ரூம் உட்பட வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் 160 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அருணா நேரில் ஆய்வு செய்தார். ேமலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி., கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Election Officer ,Ooty Government Polytechnic College ,Ooty ,Election ,Nilgiri ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...