×

மார்த்தாண்டம் மேம்பால கீழ்ப்பகுதியில் அகலம் குறைவாக அமைக்கப்படும் அணுகுசாலைகள்: விபத்துக்கள் ஏற்படும் அபாயம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.220 கோடி செலவில் தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக இது உள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.மேம்பாலத்தில் இருந்து மார்க்கெட் சாலைக்கு காந்தி மைதானம் பகுதியில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. களியக்காவிளை மார்க்கத்தில் இருந்து மேம்பாலம் வழியாக வரும் வாகனங்கள் மார்க்கெட் சாலைக்கு இறங்கி வரும் வகையிலும், மார்க்கெட் சாலையில் இருந்து மேம்பாலம் வழியாக நாகர்கோவில் மார்க்கம் வாகனங்கள் செல்லும் வகையிலும் இரண்டு தளங்களாக உள்ளன. ‘ஒய்’ வடிவிலான இந்த 2 தளங்களும் பின்னர் ஒன்றாக சேர்ந்து மார்க்கெட் சாலையில் முடிகின்றன. தற்போது மேம்பாலத்தில் வெள்ளோட்ட முறையில் வாகன போக்குவரத்து நடந்து  வருகிறது.

மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து  வருகிறது. இதில் காந்தி மைதானத்தில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் சாலை தார் அமைக்கும் பணி நிறையும் தருவாயில் உள்ளது. ஆனால் ஒருசில இடங்களில் தார் போட வேண்டியது உள்ளது. அதுபோல கீழ்ப்பகுதி சாலையின் இருபக்கங்களிலும் உள்ள மேடான நடைபாதைகளில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அகலம் மிகக்குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக ஒரு பக்க சாலை 4 முதல் 4.5 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு போடப்பட்டுள்ள சாலை சில இடங்களில் அகலமாகவும், சில இடங்களில் திடீரென குறுகியும் ஒழுங்கற்ற வகையில் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் 3 மீட்டர் அகலமும், சில இடங்களில் 3.5 மீட்டர் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஆக்ரமிப்பு அகற்றி ஒழுங்காக சாலை அமைக்கவில்லை.

இதனால் வாகனங்கள் செல்லும்போது விபத்துக்குள் ஏற்படும் அபாயம் உள்ளது. அணுகுசாலைகள் 4 முதல் 4.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.  இதற்காக சாலையோரம் குறியீடும் செய்யப்பட்டது. அதுபோல சாலை குறுகலாக வரும் பகுதியில், உரிய இழப்பீடு வழங்கினால்  தங்கள் நிலத்தை வழங்கவும் பலர் தயாராக உள்ளனர். இதற்காக அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுதியும் கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதை வைத்து நல்லதை வரவழைப்பதாக நினைத்து அணுகுசாலைகளை குறுகலாக அமைத்து வருகின்றனர்.பல இடங்களில் அதிகபட்ச அகலம் 3 மீட்டர் மட்டுமே உள்ளது. சில இடங்களில்  இது 2.5 மீட்டராக குறுகிவிடுகிறது. குறிப்பாக பம்மத்தில் பாலம் தொடங்கும்  பகுதியில் அகலம் குறைவாக உள்ளது. மேலும் சில இடங்களில் ஓடைகளின் மீது காங்கிரீட் சிலாப் அமைத்து சாலை  அமைக்கப்படுகிறது. இது கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது சிலாப் உடைந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேம்பாலம் மற்றும் கீழ்ப்பகுதியில் நடந்துவரும் சாலைப்பணிகளை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் சாலை அமைப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருவது குறித்து பொதுமக்கள், வியாபாரிகள்  பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும் வெட்டுவெந்நியில் பாலம் தொடங்கும் இடத்தில் பஸ் நிறுத்தம்  வேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இது இப்படி இருக்க, நேற்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஜேசிபி இயந்திரம் ஒன்று குறுகலான பகுதியில் சிக்கி கொண்டது. அப்பகுதியில் மின்பெட்டி உள்ளதால் ஜேசிபியால் முன், பின் நகர முடியவில்லை. பின்னர் கடின முயற்சிக்கு பின்னர் ஜேசிபி மீட்கப்பட்டது. இந்த நிலையில் குறுகிய சாலையில் வாகன போக்குவரத்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே முறையான இழப்பீடுகளை வழங்கி நிலம்  கையகப்படுத்தி 4 முதல் 4.5 மீட்டர் அகலத்தில் அணுகு சாலையை அமைக்க வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : accidents , Marthandam upstream, approaches, accidents, risk
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...