மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக உச்சிப்புளி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியமான் கடற்கரை பகுதியில் உச்சிப்புளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேதுநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் ஜெயக்குமாரின் (59) தோட்டத்தை போலீசார் சோதனையிட்டனர்.அங்கு 196 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, திருப்புல்லாணி அருகே சேதுநகரில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை நேற்று மாலை கைது செய்தனர். மண்டபம் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஜெயக்குமார் பணியாற்றியபோது, கடத்தல்காரர்கள் சிலருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: முன்னதாக கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கரூர் அகதிகள் முகாமில் வசிக்கும் கார்த்திக் (35) என்பதும், உச்சிப்புளி பகுதியிலிருந்து இலங்கைக்கு 10 கிலோ கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி