புதுடெல்லி: அரசு உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்த தேசியளவில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கும் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பெயர்களை பிப்ரவரி இறுதிக்குள் பரிந்துரை செய்யும்படி தேடுதல் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி கெடுவிதித்தது.
இதையடுத்து, லோக்பால் நியமனம் தொடர்பாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8 உறுப்பினர்கள் கொண்ட தேடுதல் குழு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்க இந்த குழு முடிவு செய்தது. இது தொடர்பான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும் என மத்தியப் பணியாளர் அமைச்சகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி