×

சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா உட்பட 4 பேர் பதவி பறிப்பு

புதுடெல்லி:  ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா உட்பட 4 பேர், சிபிஐ.யில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.  சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் லஞ்ச புகார் தெரிவித்ததால் அவர்களை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் அவரை மீண்டும் இயக்குனராக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த பொறுப்பை ஏற்ற அலோக் வர்மாவை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு, தீயணைப்புத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதை அலோக் வர்மா ஏற்க மறுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். ந்நிலையில், சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவின் சிபிஐ பதவிக்காலம் ரத்து செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தவிர, சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட சிபிஐ இணை இயக்குனர் அருண் குமார் சர்மா, துணை ஐஜி மணீஷ் குமார் சின்ஹா, எஸ்பி ஜெயந்த் ஆகியோரின் சிபிஐ பதவிக்காலமும் ரத்து செய்யப்பட்டு வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சிபிஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் நேற்று காலை நடைபெற்ற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) கூட்டத்துக்குப் பிறகு, இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Special Director ,Ashta , CBI,Special, Director,Ashta, 4
× RELATED அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அட்சய திருதியை