×

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மற்றும் வேலக்காடு பகுதியில் அடக்கம் செய்ய பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஆம்புலன்ஸ் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் சுகாதாரப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் காயமடைந்தனர். பின்னர் மருத்துவர் சைமனின் உடல் வேலக்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அச்சமயம் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைமன் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு எடுத்துக்கொண்டு இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்தது. மேலும் மத்திய, மாநில அரசுகள் உரிய அடக்கம் செய்வதற்கும், உரிய நடைமுறை, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பித்து வந்தன. தொடர்ந்து, அடக்கம் செய்யப்பட்ட சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய கோரி அவரது மனைவி ஆனந்தி சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தார். இதனை பரிசீலித்த ஆணையர், ஆனந்தியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சைமனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் மீண்டும் தனது கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் முன்பு விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் வேலக்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு தரப்பட வேண்டும். மேலும் இவை அனைத்தும் வீடியோ பதிவுசெய்யப்பட வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். …

The post கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Igourd ,Simon ,Corona ,Chennai ,Ikord ,
× RELATED உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள...