சென்னை: பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தக பைகளுக்கான எடையை நிர்ணயத்துல மத்திய அரசின் உத்தரவிற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை பள்ளிகள் பின்பற்றும் வகையில் மாநில அரசு விதிகளை வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கனமான புத்தக பையை சுமந்து செல்வதால் இளம் குழந்தைகளுக்கு முதுகு வலி, தசை மற்றும் தோள்பட்டை வலி, மயக்கம் போன்ற உபாதைகள் வர வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு மாணவர்களின் நீண்டகால சிரமத்திற்கு தீர்வு காணும் வகையில் 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் வழங்க கூடாது என மத்திய மனிதவளம் மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றரை கிலோவும் 3 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு 2 முதல் 3 கிலோ வரையிலும் புத்தகப்பையின் எடை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 முதல் 7ஆம் வகுப்புக்கு தலா 4 கிலோ, 8 முதல் 9 ஆம் வகுப்பிற்கு 41/2 கிலோ, 10 ஆம் வகுப்பிற்கு 5 கிலோ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட புத்தகப்பையை சுமக்க வேண்டும் என்ற நிலையால் பள்ளி செல்லும் ஆர்வம் குறைவதாக கூறும் மாணவர்கள் மத்திய அரசின் உத்தரவு இனி இந்த நிலையை மாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எந்தந்த தினத்தில் எந்தந்த பாடங்கள் எடுக்கப்படுகின்றது என்கின்ற அட்டவணை முறையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். பள்ளிகளில் லாக்கர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு அங்கேயே புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன் வைத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி