புதுடெல்லி: பாமக அன்புமணி மீதான முறைகேடு வழக்கை வரும் ஜனவரி 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உத்தரப் பிரதேசத்தில் ரோஹில்கந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்திற்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக அவர் உள்பட 9 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் அன்புமணி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தன் மீதான குற்றப்பத்திரிகையை நிராகரித்து விசாரணைக்கு தடை விதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு, வரும் 29ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதி வழக்கை வரும் ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நேற்று உத்தரவிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி