டெல்லி: அரசு இல்லங்களில் குடியேறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் மின் சாதனப் பொருட்கள் வாங்குவதற்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 100% உயர்த்தியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் அரசு இல்லங்களில் குடியேறும் போது வீட்டு உபயோகப் பொருள்களும், மின்சாதனப் பொருள்களும் வாடகையின்றி வழங்கப்படுகின்றன. மத்தியப் பொதுப்பணித்துறை இயக்குநருக்கு, மத்திய குடியிருப்பு இயக்குநரகம் அண்மையில் புதிய நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆணையை அனுப்பியுள்ளது.
அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அவருக்கான அரசு இல்லத்தில் குடியேரும்போது பொருள்களை வாங்கிக் கொள்வதற்கு, இதற்கு முன்பிருந்த விதிமுறைகளின்படி ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி ஒதுக்கீடு 4 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கிக் கொள்வதற்கான ஒதுக்கீடும் ரூ.4 லட்சத்திலிருந்து, ரூ.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பைக் காட்டிலும் கூடுதல் மதிப்புக்கு வாங்கப்படும் பொருள்களுக்கு வாடகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி