திருமலை: மத்திய அரசு வழங்கிய 70 ஆயிரம் கோடி நிதியை சந்திரபாபு நாயுடு முறையாக பயன்படுத்தவில்லை என்று தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான இணை செயல் அலுவலர் பாலாஜி தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடுவது குறித்து மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் கமலாலயத்தில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கேட்டு எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜ வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தேசிய தலைவர் அமித்ஷா அறிவிப்பார்.
ஆந்திராவிற்கு மாநில பிரிவினையின்போது தெரிவித்ததை போன்று 70 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையாக பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டது. ஆனால் தெலுங்கு தேசம் கட்சியின் அடிப்படை கோட்பாடுகளை மறந்து கட்சி தொண்டர்களுக்கும், மாநில மக்களுக்கும் எதிராக காங்கிரசுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி வைத்துள்ளார்.
ஏற்கனவே, பாஜவுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்ப்பதாக கூறி சந்திரபாபு நாயுடு அனைவரையும் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பால் எந்த மாற்றமும் ஏற்படாது. மோடியை பார்த்து அச்சத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றாக சேர்ந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி