புதுடெல்லி: பிரதமர் மோடியை சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள் என விமர்ச்சித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் மீது டெல்லி பாஜ தலைவர் ராஜீவ் பாபர் கிரிமினல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் பெங்களூர் இலக்கிய திருவிழாவில் பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், “பிரதமர் மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்துள்ள தேள்” என்று கூறினார். இதையடுத்து, டெல்லி பாஜ தலைவர் ராஜீவ் பாபர் என்பவர் வழக்கறிஞர் நீரஜ் மூலம் சசி தரூர் மீது கிரிமினல் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் சமர் விஷால் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சசி தரூரின் பேச்சால் எனது மத உணர்வுகள் பாதிக்கப்பட்டன. நான் இறைவன் சிவனின் பரம பக்தன்.
கோடிக்கணக்கான சிவ பக்தர்களின் உணர்வுகளை சசி தரூர் பாழடித்து விட்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிவ பக்தர்களின் மனது தரூரின் பேச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. தரூர் வேண்டுமென்ேற சிவ பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் பேசியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் கூறியதாக கூறப்படும் இந்த கருத்தை இப்போது சசிதரூர் கூற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான காரணமும் இல்லை. மோடி இன்று சர்வதேச அளவில் பிரபலமாக உள்ளார்.
எனவே சசி தரூர் மீது இந்திய தண்டனை இயல் சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி சமர் விஷால், வழக்கை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதற்கிடையே, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இது என்று சசி தரூர் விமர்ச்சித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி