
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோடேஸ்வரம்மா (45) என்ற பெண், அடிக்கடி மயக்கம் மற்றும் வலிப்பு காரணமாக, குண்டூர் மாவட்டம் வட்லமுடி என்ற கிராமத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், நரம்பியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மூளையின் முக்கியமான பகுதிக்கு அருகில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதை ‘அவேக் கிரானியோட்டமி’ என்ற சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் குழு முடிவு செய்தது.
ஆனால், இந்த சிகிச்சை நடக்கும்போது நோயாளி சுயநினைவுடன் இருக்க வேண்டும். இதனால், சிகிச்சைக்கு முன்பு நோயாளியின் விருப்பம் குறித்து கேட்டறிந்த மருத்துவர்கள் குழு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ என்ற தெலுங்கு படத்தை லேப்டாப்பில் ஒளிபரப்பினர். பிறகு அறுவை சிகிச்சைக்கு நடுவே நோயாளியின் உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பதை கண்டறிய கை, கால்களை அசைக்கும்படி சொன்னார்கள். பிறகு மருத்துவர்கள் குழு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர்.

