×

முத்துக்கள் முப்பது ஆடிப்பூர நாயகி ஆண்டாளின் அற்புதங்கள்

ஆடிப்பூரம் என்றாலே ஆண்டாள் நினைவு வராமல் இருக்காது. அந்த ஆண்டாளைப் பற்றிய முப்பது முத்துக்கள் இங்கே உங்களுக்காக மாலையாகத்  தொடுத்து வழங்குகிறோம்.

1.பூரம்
ஆண்டாள் அவதரித்தது பூரம் நட்சத்திரம். சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரம். சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரம். எனவே ஆடிப் பூரத்தை அநுஷ்டிப்ப வர்களுக்கு மகாலட்சுமியின் பூரண அருளும், சுக்கிர பகவானின் பூரண அருளும், ஆண்டாளின் பூரண அருளும் அவசியம் கிடைக்கும்.

2.ஏன் அவதாரம்?
அவதாரம் என்பது மேலிருந்து கீழே இறங்கி வருவது. பூமாதேவி நம்மை எல்லாம் மேல் நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக, வைகுந்தத்தில் இருந்து கீழே நமக்காக இறங்கி வந்தாள்  என்பதே அவள் அவதாரச்  சிறப்பாகும். இதை மாமுனிகள் ‘‘இன்றோ திருவாடிப்பூரம்! எமக்காக வன்றோ இங்கே ஆண்டாள் அவதரித்தாள்” எனப்பாடுகின்றார். நாம் கர்மத்தைக்  கழிப்பதற்காக பிறந்திருக்கின்றோம். நம்மை மீட்டெடுப்பதற்காக ஆண்டாள் அவதரித்தாள்.

3.சிம்ம ராசியும் ஆளுமையும்
பூரம் நட்சத்திரம் சிம்ம ராசியில் வருவதால், சிம்ம ராசியில் அவதரித்தவர்கள் கம்பீரமும் ஆளுமையும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும். அவர்களுக்கு அடங்கியே மற்றவர்கள் நடக்கும்படியான சூழல் இருக்கும். ஆண்டாள் ஆளுமை படைத்தவளாக இருக்கிறாள். அவள் சொன்னதைத்தான் பகவான் கேட்டான்.

4.ஆண்டாள் பெயர்க் காரணம்
ஆண்டாள் என்றால் ஆளுதல் என்று பொருள். சரி, அவள் யாரை ஆண்டாள்? கவியரசு கண்ணதாசன் பாடுவார். ‘‘கோதை ஆண்டாள்; தமிழை ஆண்டாள்;  கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்”. அவள் தமிழை ஆண்டவள். தமிழ்ப்  பாடல்களின் மூலம் இறைவனை ஆண்டவள். அதே பாடல்களின் மூலம் பக்தர்களின் மனதை ஆண்டவள். அவள் பூமாதேவி என்பதால் இந்த பூமியையும் ஆண்டவள். ஆண்டு கொண்டிருப்பவள்.

5.சங்கத்தமிழ் பாடியவள்
ஆண்டாள் சங்கத்தமிழ் பாடியவள். ஆண்டாளின் தமிழ் ஒன்றுபடுத்திய தமிழ் பக்தர்களை எல்லாம் சங்கமிக்க வைத்த தமிழ். அதனால்தான் மார்கழி மாதத்தில் ஆண்டாள் தமிழ் பாடி எல்லோரும் ஒரே கோஷ்டியாக சங்கமிக்கிறார்கள். அப்பொழுது பகவானும் அங்கே வந்து சங்கமிக்கிறான். எனவே ஆண்டாள் பாடிய தமிழை “சங்கத்தமிழ்” என்று போற்றுகிறோம்.

6.அப்பாவும்  மகளும்
ஆழ்வார்கள் பன்னி ரண்டு பேர்களில் இரண்டு ஆழ்வார்கள் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள். ஒருவர் பெரியாழ்வார். மற்றவர் அவர் பெண் பிள்ளையான ஆண்டாள். இவர்களுக்குள் தந்தை மகள் என்கின்ற உறவோடு ஆசாரியன் சீடன் என்கிற உறவும் உண்டு.  

7.பெருமாளுக்கு இரண்டு மாமனார்கள்
பெருமாளுக்கு இரண்டு ஆழ்வார்கள் பெண் கொடுத்து மாமனார் ஆனார்கள். ஒருவர் பெரியாழ்வார். ‘‘ஒரு மகள் தன்னை உடையேன்; உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்; செங்கண்மால் தான்கொண்டு போனான்” என்று தன் திருமகளான ஆண்டாளை  பெருமாளுக்கு மணம் செய்து தந்தவர். இன்னொரு ஆழ்வார் குலசேகர ஆழ்வார். சேரகுலவல்லி நாச்சியாரை அரங்கனுக்கு திருமணம் செய்து கொடுத்து மாமனார் ஆனவர்.

8.இரண்டு பிரபந்தங்கள்
ஆண்டாள் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறாள். ஒன்று திருப்பாவை. இரண்டு நாச்சியார் திருமொழி. இரண்டும்  மாதத்தின் பெயரோடு துவங்குகிறது .திருப்பாவை “மார்கழி” என்ற மாதத்தின் பெயரோடு துவங்குகிறது. நாச்சியார் திருமொழி “தையொரு திங்களும்” என்று தை மாதத்தின் பெயரோடு துவங்குகிறது. மார்கழியும் தையும் அடுத்தடுத்த மாதங்கள் என்பது மற்றுமொரு சிறப்பு.

9.கோதை உபநிடதம்
வேதத்தின் உச்சி பாகம் வேதாந்தம் என்று சொல்லப்படும் உபநிடதம். உபநிடதத்தின் கருத்துக்களை எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி பாடியவள் ஆண்டாள். அவளுக்கு கோதை என்கிற திருநாமமும் உண்டு. அவள் பாடிய திருப்பாவை வேதம் அனைத்திற்கும் வித்தாகும். பாதகங்கள் தீர்த்து  பரமன் அடி காட்டும் பெருமையைப் பெற்றது. அதனால் கோதை  உபநிடதம் என்றே வழங்கப்படுகிறது

10.ஞானப் பூங்கொடி
ஆழ்வார்கள் பன்னிரண்டு பேரில் ஒரே ஒரு பெண் ஆண்டாள். மீதியுள்ள 11 பேரும்  ஆண்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாரிசாக ஆண்டாள் திகழ்கிறாள். எனவே இவளுக்கு ‘‘ஞானப்பூங்கொடி'' என்று பெயர் ‘‘அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று மாமுனிகள் பாடியுள்ளார்.

11. பிஞ்சாய்ப் பழுத்தவள்
மிகச் சிறிய வயதில், மிகப் பெரிய வேதாந்த விஷயத்தைப் பாடியவள். மன உறுதியோடு “பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன்; வேறு யாரையும் மணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று கனவு கண்டு பாடி, அதை நனவாக்கிக் கொண்டவள் என்பதால், “பிஞ்சாய்ப் பழுத்தாள்” என்கிறோம். ஞானத்தின் ஏற்றத்தைக் கருதி இந்த அடைமொழி கொடுத்து அழைக்கின்றனர்.

12. கோயில்களில் ஆண்டாள்
எல்லாப்  பெருமாள் ஆலயங்களிலும் தனக்கு ஒரு தனிச் சந்நதி பெற்ற பெருமை உடையவள். பெருமாளுக்கு இடது புறம் ஆண்டாள் சந்நதியும், வலது புறம் தாயார் சந்நதியும் இருக்கும். தாயார் பெரும்பாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி தர, ஆண்டாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

13. நாச்சியார் திருமாளிகை
எல்லாப் பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் இருப்பாள். ஆனால்  வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெருமாள் இருப்பார். ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலை பெருமாள் கோயில் என்று சொல்லமாட்டார்கள் ஆண்டாள் கோயில் என்பார்கள். வைணவர்கள் இன்னும் நைச்சியமாக  ‘‘நாச்சியார் திருமாளிகை” என்பார்கள். வீட்டோடு மாப்பிள்ளையாக பெருமாள் இங்கே ஆண்டாள் மாளிகையில் இருக்கிறார். ஆண்டாள் வைத்த சட்டம்தான் அங்கு
செல்லுபடியாகும்.

14. வடபத்ரசாயி
திருவில்லிபுத்தூரில் நாச்சியாரும் பெரியாழ்வாரும் வணங்கிய பெருமை வடபத்ரசாயி என்கின்ற பெருமாளுக்கு உண்டு. அவர் தான் இங்கே ஆதி தெய்வம். அவருக்கு தனிக்கோயில் உண்டு. அது பழமையான கோயில். “வட” என்றால் ஆல  மரம். ‘‘பத்ரம்” என்றால் இலை. “சாயி” என்றால் சயனம். உலகமெல்லாம் தன் வயிற்றில் அடக்கி பிரளய காலத்தில் ஆலிலை மீது துயில் கொண்ட பெருமாள் இவர். எனவே தான் திருப்பள்ளி எழுச்சியாக பெருமாளை மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடி துயில் எழுப்பினாள் ஆண்டாள்.

15. தீர்த்தம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பற்பல தீர்த்தச்  சிறப்புக்கள் உண்டு. திருமுக்குளம், திருவேணி தடாகம், திருப்பாற்கடல், சக்கர தீர்த்தம், கண்ணாடித் தீர்த்தம், கோனேரி தீர்த்தம், கண்வ  தீர்த்தம், பஞ்ச  தீர்த்தம், மண்டூக நதி என்று பல தீர்த்தங்கள் இங்கு உண்டு.. இதில் திருமுக்குளம் ஆண்டாள் நீராடிய தீர்த்தம்.

16. அனந்தாழ்வார் தேடிய மஞ்சள்
ராமானுஜரின்  சீடரான அனந்தாழ்வார், ஆண்டாளைச் சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூர்
வந்தார். ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்தில் இறங்கி நீராடினார். நெடுநேரம் அவர் தண்ணீரில் முழுகுவதும் எழுவதுமாக இருந்தார். கரை ஏறுவது போலத்  தெரியவில்லை. சீடர்கள் கேட்டனர். ‘‘குளத்தில் என்ன தேடுகிறீர்கள்?” அப்பொழுது அனந்தாழ்வார் சொன்னார். ‘‘என் தாயார் ஆண்டாள், ஒரு காலத்தில் நீராடிய இந்தக்  குளத்தில், அவள்  பூசிய மஞ்சள் துண்டு ஏதாவது இருந்தால், பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாமே என்று தேடுகிறேன்” என்றாராம்.

17. ஆண்டாள் நந்தவனம்
பாண்டியன் அவையில் வாதம் செய்து வென்றவர் பெரியாழ்வார் .அப்பொழுது ஒரு பெரியாழ்வாருக்கு   பொற்கிழி கிடைத்தது. அதை வைத்துக் கொண்டு வளமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கவில்லை. தான்  வழிபட்ட பெருமானுக்குத் திருப்பணிகள் செய்ய வேண்டும் என்று ராஜ கோபுரத் திருப்பணியைச் செய்தார். நந்தவனம் ஒன்றை அமைத்து மாலை கட்டித் சமர்பித்தார். அந்த நந்தவனத்தின் துளசிச்செடியில் தான் ஆண்டாளைக்  கண்டெடுத்து வளர்த்தார். அந்த நந்தவனம் “ஆண்டாள் நந்தவனம்” என்று வழங்கப்படுகிறது.

18.ஆண்டாளும் வராக அவதாரமும்
ஆண்டாளுக்கு வராக அவதாரத்தின் மீது காதல். உலகை மீட்டு எடுத்தவராகரிடம் மக்கள் வாழ்வதற்கான வழிகளைக் கேட்டறிந்த ஆண்டாள், அந்த எளிய வழியை எடுத்துச் சொல்வதற்காகவே அவதாரம் எடுத்தாள். அதற்கு முன்னால் கருடாழ்வாரும்  பெரியாழ்வாராக இங்கே அவதரித்தார். பெரியாழ்வார் நட்சத்திரமும் கருடாழ்வார் நட்சத்திரமும் சுவாதி நட்சத்திரம்.

19.சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
மகாலட்சுமி சூடிய மாலையைக் கூட எம்பெருமான் ஏற்பதில்லை. பெருமாள் சூடிக்களைந்த மாலையைத்தான் பிராட்டி ஏற்றுக்கொள்வாள். ஆனால் முதல் முதலில் ஆண்டாள்  சூடிய மாலையை ஏற்ற பெருமை பெருமானுக்கு உண்டு. ஆண்டாள் சூடிக்களைந்த மாலையையே எம்பெருமானுக்கு சூட்டியதால் “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்ற திருநாமம் ஏற்பட்டது.

20.கண்ணனைக் கட்டிப்போட்டவர்கள்
பரம்பொருளான கண்ணனை இருவர் கட்டிப்போட்டனர். ஒருத்தி தாயான யசோதை. இன்னொருத்தி அவரை அடைய எண்ணிய ஆண்டாள். யசோதை ஒரு கயிற்றால் அவனை  உரலோடுச்  சேர்த்து கட்டிப் போட்டாள். ஆண்டாள் ஒரு பூ மாலையை எடுத்து அவரை பலவந்தமாகக்  கட்டிப்போட்டாள். அவர்கள் கட்டிப்போடும்படியாக என்ன குற்றம் செய்தான் என்கின்ற கேள்வி வரும். திருடியதற்காக அவனை  இருவருமே கட்டிப் போட்டனர்.  வெண்ணெய் திருடியதற்காக  யசோதையும், பெண்ணைத் (தன் உள்ளத்தை) திருடியதற்காக ஆண்டாளும் கட்டிப்போட்டனர்.

21.ஆண்டாள் திருக்கல்யாணம்
மஹாலஷ்மித் தாயார் அவதரித்த பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் அமோகமாக நடக்கும். பொதுவாக எல்லாக் திருக்கோயில்களிலும் திருக்கல்யாணம் செய்தபின் தான் மாலை மாற்றுவார்கள். ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாலை மாற்றியபின்தான் திருக்கல்யாணம் நடக்கும். இந்த மாலைதானே  பெருமாளை ஆண்டாள் மீது காதல் கொள்ளச் செய்தது.

22. கண்ணாடிக் கிணறு
ஆண்டாள் தான் சூடிய மாலை தனக்கு அழகாக இருக்கும் என்று பார்க்க மாட்டாள் . பெருமாளுக்கு  அழகாக இருக்குமா? அவன் கழுத்துக்குச்  சரியாக பொருந்துமா? என்று அழகு பார்த்து, பின் பெருமாளுக்குச்  சமர்பிப்பாள். அப்படி அழகு பார்த்து மாலை தந்தவள் ஆண்டாள். அவள் அழகு பார்த்த இடம் திருக்கோயில் பிரகாரத்தில் இருக்கும் கண்ணாடிக் கிணறு.

23.கம்பன்  கொச்சு
ஆண்டாள் மீது பெரும் பக்தி கொண்டவர் கம்ப நாட்டாழ்வார். ஆண்டாளின் நீராட்ட உற்சவத்தை  சேவிக்க ஒருமுறை அவர் விரைந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.

வெகு தூரம் நடந்த களைப்பில் சற்று நேரம் அவர் அருகில் உள்ள கிருஷ்ணன் கோயில் என்ற  இடத்தில் படுத்தார். எழுந்த போது, நீராட்ட உற்சவம் இந்நேரம் நிறைவு பெற்றிருக்கும் என்று தவித்து வேகமாகக் கிளம்பினார். ஆண்டாளின் நீராட்ட உற்சவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அங்கே வைரத்தால் ஆன ஒரு அணிகலனைக்  காணாமல் தேடிக் கொண்டு இருந்ததால் நீராட்டம்  தாமதமாகிக் கொண்டே இருந்தது.

நீராட்ட உற்சவம் இந்நேரம் நிறைவு பெற்றிருக்கும் என்ற வருத்தத்தோடு வந்த கம்பர், திருமஞ்சனம் தொடங்கவில்லை என்று மகிழ்ந்தார். அப்போது அவர் கண்ணில் பட்டது அந்த வைர அணிகலன். அதை எடுத்து பட்டர்களிடம் கொடுக்க திருமஞ்சனம் நடைபெற்றது. கம்பரும் ஆண்டாளின் அருட்கருணையை நினைத்து மகிழ்ந்தார். தை மாதப் பிறப்பன்று நடக்கும் இந்த திருமஞ்சனத்தின் போது சூட்டப்படும் அந்த அணிகலனுக்கு “கம்பர் கொச்சு” என்று பெயர்.

24.வேங்கடவன் சூடும் மாலை
‘‘வேங்கடவற்கு என்னை விதி” என்று திருமலையப்பனிடம் காதல் கொண்டு பாடினாள் ஆண்டாள். அந்தக் காதலை வேங்கடவன் மறக்கவில்லை. எம்பெருமானார் மூலம்  ஆண்டாளின் திருமாலையை  சூட விரும்புவதாக ஒரு முறை பட்டர்கள் மூலமாகத்  தெரிவித்தார்.  ராமானுஜர் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் ஆண்டாள் அனுப்பிய சூடிக்களைந்த மாலையை, தன் கழுத்தில் சூட்டிக்கொண்டு தான் திருவேங்கடவன் உற்சவம் கண்டருளுகிறான்.

25.கோயில் அண்ணன்
திருமாலிருஞ்சோலை அழகருக்கு  தன்னுடைய மனதால் நூறு அண்டா வெண்ணையும்,  நூறு அண்டா அக்கார அடிசிலும் சமர்ப்பிக்க எண்ணினாள் ஆண்டாள்.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு  நான்-
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!       
என்ற பாடலில் இதை அவள் விண்ணப்பித்தாள்.

எம்பெருமானார் நிஜமாகவே ஆண்டாளின் மனதின் விருப்பத்தை நிறைவேற்றினார். இதனால் உள்ளம் பூரித்த ஆண்டாள், ராமானுஜர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகின்ற பொழுது, தங்கையின் விருப்பத்தை  நிறைவேற்றிய தமையனாகக் கருதி, ‘‘அண்ணா” என்று அழைத்து, கர்ப்பக்கிரகத்தை விட்டு சற்று வெளியே வந்தாள் . அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உற்சவ மூர்த்திகள்  கர்ப்பகிரகத்தில் மூலவரோடு இல்லாமல் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளி இருக்கின்றனர். “கோயிலண்ணன்  புறப்பாடு” என்று இங்கே ஒரு புறப்பாடு ராமானுஜருக்கு உண்டு.

26.லக்ஷ்மி நாராயணப் பெருமாள்
பெரியாழ்வாரின் திருவாராதனப்  பெருமாளாகிய லக்ஷ்மி   நாராயணப் பெருமாளை ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் திருமாளிகை, முதல் பிரகாரத்தில், தென்கிழக்கு மூலையில், வடதிசை நோக்கி அருளும்  நிலையில் எப்பொழுதும் நாம் சேவிக்கலாம்.  

27.மௌனவிரதம் கலைந்த தேசிகன்
ஒருமுறை சுவாமி வேதாந்த தேசிகன் மௌன விரதம் இருந்தார். பிரதோஷம் அன்று மௌன விரதம் இருப்பது அவருக்கு வழக்கம். அனுஷ்டானத்தை அவர் எக்காரணத்தை முன்னிட்டும் மாற்ற விரும்பமாட்டார். அத்தனை வைராக்கியம் உடையவர்.

ஆனால் மௌன விரதத்தை கலைத்து,  அவர் வாயால் ஸ்லோகம் பாடுவதைக்  கேட்க விரும்பிய ஆண்டாள், தான் வழக்கமாகப் போகும் பாதையை மாற்றிக்கொண்டு, அவர் இருந்த வீதிக்கு எழுந்தருளி னாள். ஆண்டாளை வரவேற்ற தேசிகன், தன் மௌனத்தைக் கலைத்து கொண்டு ஆண்டாள் மீது 29 ஸ்லோகங்களால் “கோதாஸ்துதி” என்ற நூலை அருளிச் செய்து சமர்ப்பித்தார். அதைக்கேட்டு  மகிழ்ந்த ஆண்டாள், அவருக்கு தீர்த்தப்  பரிவட்ட மாலை மரியாதைகளை செய்து ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினாள்.

28.ஐந்து கருடசேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கக்கூடிய ஆடி உற்சவத்தில் மிகச்சிறப்பான உற்சவம் திருத்தேரோட்டமும், ஐந்து கருட சேவையும்,முத்துக்குறி சேவையும் ஆகும். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். பஜனை, கும்மி, கோலாட்டம் என்று ஸ்ரீவில்லிபுத்தூரே அமர்க்களப்படும்.

29.ஆமுக்த மால்யதா
கிருஷ்ண தேவராயர் இத்தலத்து எம்பெருமானின் மீதும், ஆண்டாளின்  மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  கிருஷ்ணதேவராயர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில்  ஏராளமான திருப்பணிகளைச்  செய்திருக்கிறார். அது மட்டுமன்றி, அவர் மிகப்பெரிய கவிஞராகவும் இருந்ததால், ஆண்டாளின் பெருமைகளை ‘‘ஆமுக்த மால்யதா” என்று ஒரு காவியமாகப்  படைத்து ஆண்டாளுக்குச்  சமர்ப்பித்தார்.

30.அழகர் விரும்பிய ஆண்டாள் மாலை
ஸ்ரீரங்கநாதனும் திருவேங்கடநாதனும் விரும்பிய மாலையை, திருமாலிருஞ்சோலை அழகன் விரும்பாமல் இருப்பானா?  சித்ரா பவுர்ணமியன்று வைகையில் எழுந்தருளும் போது, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டுதான் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தருகிறான். இப்படித் தொட்ட இடமெல்லாம் “ஆடிப் பூர நாயகியான” ஆண்டாளின் பெருமை விரிந்துகொண்டே இருக்கும்.அதில் சிலவற்றை மட்டுமே முத்துக்கள் முப்பதாகப்  பார்த்தோம்.

பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி

Tags :
× RELATED வெற்றிக்கு வித்திடும் குலதெய்வ வழிபாடு!