×

பொற்றாளம் வழங்கிய தாளபுரீஸ்வரர்

காவிரி வடகரைத் தலங்களில்17 ஆவது திருத்தலம் திருக்கோலக்கா. புராணபெயர் சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில். மூலவர் சப்தபுரீஸ்வரர் என்றும் தாளபுரீஸ்வரர் என்றும் திருத்தாளமுடையார் என்றும் போற்றபடுகிறார். கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திற்கு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிறார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன், திறந்த வெளிமுற்றம் உள்ளது. இங்கு ஸ்தல விருட்சமான சரக்கொன்றை மரமும், அதனருகே வேம்புடன் இணைந்த அரச மரமும் உள்ளது. இங்கே “தேயுலிங்கம்’’ (அக்னி லிங்கம்) காட்சியளிக்கிறார்.

இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால், இறைவன் சந்நதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் “தாளபுரீஸ்வரர் லிங்க’’ உருவில் எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நதி ஒரு தனிக் கோயிலாக இறைவன் சந்நதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக, இறைவியின் சந்நதியை அடையலாம். அம்பாள் கருணைபொங்கும் முக அழகுடன் அபயகரம் தாங்கி காதுகளில் அழகிய  சக்ர தாடகங்களுடன் காட்சி தருவதைக் காணலாம். இங்கு ஜெயா மற்றும் விஜயா இருவரும் அம்பாளுக்கு முன் காட்சியளிக்கின்றனர். இங்கே ஆதி அம்பாள் சிலையும், ஓசை கொடுத்த நாயகி அம்மன் சந்நதி வாசலில் விநாயகரும், முருகரும் துவார பாலகர்களாக இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் தாளபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர்.

நவக்கிரகங்களின் தலைமை பதவியை சூரியனுக்கு, இந்த தலத்தில்தான் ஈசன் வழங்கினார் என்று கூறப்படுகிறது. இந்த பேரருளை சூரியன் பெற்ற நாள், கார்த்திகை மாத ஞாயிறு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத ஞாயிறு அதிகாலை 6 மணிக்கு சூரிய பூஜைசெய்ய, பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி அப்போது காட்சி தருகிறார்கள் இந்த ஆலயத்தின் முன்புறம் உள்ள திருக்குளமே, சூரியன் உண்டாக்கிய சூரிய தீர்த்தமாக திகழ்கிறது.கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நதியை அடுத்து மகாலட்சுமி சந்நதி உள்ளது.

மகாலட்சுமி தனது கணவனான திருமாலை அடைய கொன்றை வனமாகிய இத்தலத்தில் தவமிருந்தார். சிவபெருமான் மகிழ்ந்து அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்தருளினார் எனவும் எனவே, இத்தலம் “திருக்கோலக்கா’’ என அழைக்கப்படுவதாக புராணவரலாறு தெரிவிக்கிறது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். திருக்கோயில் கட்டடக்கலை அமைப்பில் நகரத்தார் திருப்பணியைக் கண்டு மகிழலாம். அங்கயற்கண்ணியாம் அகிலாண்டேஸ்வரி ஊட்டிய ஞானப்பாலைப் பருகி, ஊறிய தமிழ்ப் பெருக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் உலகம் வியக்கும் தேவாரப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் இல்லையா! அன்றிரவு, தோணியப்பரின் நினைவுடன் துயின்ற திருஞானசம்பந்தர், மறு நாள் காலை பொழுது புலரத் தொடங்கியதும் திருக்கோயிலுக்குச் சென்றார்.

தோணியப்பரை வணங்கினார். இறைவன் அருளால், பக்கத்தில் உள்ள திருக்கோலக்கா என்னும் திருத்தலத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது. திருஞானசம்பந்தர் கோலக்காவுக்கு வந்தார். இத்தலத்தில் இருந்துதான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத்தான். வேதத்தின் விழுப்பொருளாம் விடையேறு நாயகனை தரிசித்தார், பாடத் தொடங்கினார். வெறுமே பாடுவாரா? கைத் தாள மிட்டுக் கொண்டே பாடினார். அன்பும் பக்தியும் இழையோட… சந்தமும் தாளமும் சதிராட… சீர்காழிக் கொழுந்து பாடப் பாட, பிஞ்சுக் கரங்கள் தாளம் போடப் போட… தன் அன்புப் பிள்ளையின் அம்புஜக் கரங்கள், தாள வேகத்தில் சிவந்து போவதைப் பொறுப்பாரா பரமேஸ்வரனார்? அஞ்செழுத்து (நமசிவாய பஞ்சாட்சரம்) எழுதப்பெற்ற பொன்னால் ஆன தாளம், பிள்ளையின் பிஞ்சுக் கரங்களில் வந்து அமர்ந்தது. தலைமீது தாளத்தை வைத்து வணங்கிய திருஞானசம்பந்தர், மீண்டும் கைகளில் எடுத்து, அதைத் தட்டினார். பரமேஸ் வரன் கொடுத்த தாளத்தைக் கொண்டு, செல்ல மகன் பாடல் இசைப்பதைப் பார்த்த அம்பிகை, உடனே, அந்தத் தாளத்துக்கு ஓசை கொடுத்தார். இந்த அதிசயத்தைப் பார்த்து, தும்புரு நாரதர் உள்ளிட்ட தேவ இசை வாணர்களும் முனிவர்களும் பிறரும் மலர் மாரி பொழிந்தனர்.

அழகும், அமைதியும் ஒருங்கே நிலவும் அதி அற்புத திருத்தலமான திருக்கோலக்கா ஆலயத்தில் பொன் தாளத்தை கையில் வைத்திருக்கும் சம்பந்தரின் உற்சவ விக்கிரகம் வெகு நேர்த்தியாகவும், அழகாகவும் வடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகத்தில் இத்தலத்தை வழிபடுபவர்களுக்கு ஏற்றமிகு வாழ்வு, பாவம்விடுபடுதல், வாழ்வில் துயரமில்லா நிலை மற்றும் வினைகளும் நீங்கும் என்று தலவரலாறு கூறுகிறது. திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருவாதிரையில்சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று சட்டநாதர் ஆலயத்தில் சம்பந்தருக்கு அம்பிகை ‘திருமுலைப்பால் வழங்கும் விழா’ நடக்கும். அன்று இரவில், சீர்காழி ஆலயத்தில் உள்ள சம்பந்தர்திருக்கோலக்கா திருத்தலம் வந்து பதிகம் பாடி, ஈசனிடம் ‘பொற்றாளம் பெறும் விழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது. வள்ளல் பெருமான், தாம் பாடி அருளியவிண்ணப்பக் கலிவெண்பாவில், ஓர் காழிப் பாலற்கா அன்று பசும் பொன் தாளம் கொடுத்த கோலக்கா மேவிய கொடையாளா” என்று போற்றி உள்ளார்.

பிற்காலத்தில், இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, மந்தாகினி எனும் பெண்மணியின் மகனான விஸ்வநாதனை அழைத்துக் கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டுள்ளார். மேலும், இங்குள்ள கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வணங்கியுள்ளார். சிறிது காலத்தில் அந்தச் சிறுவன் பேசத் தொடங்கியிருக்கிறான் என்கிறார்கள் இந்தப் பகுதி பக்தர்கள். தன் மகன் பேசியதைக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தாய், நன்றிப் பெருக்குடன் இத்தல இறைவனுக்கு 42 கிராம் தங்கத்தில் தாளம் செய்து கோயிலுக்கு அளித்துள்ளார். இப்படி வாய் பேச வராதவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து அம்பாளையும், இறைவனையும் தரிசித்துச் சென்றுள்ளனர். அதில் இறைவனின் அருளால் வாய் பேச வந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை மட்டுமே 1850-யைத் தாண்டிச் செல்கிறது என்பதே, இத்தலத்திற்கு இருக்கும் சிறப்பை எடுத்துரைப்பதாக இருக்கிறது.கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோலக்கா என்ற இந்த சிவத்திருத்தலம் அமைந்துள்ளது.

 

The post பொற்றாளம் வழங்கிய தாளபுரீஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Potalam ,Thirukolakka ,Cauvery River ,Saptapuri ,Thiruthalamudayar ,Temple ,Moolavar ,Saptapuriswarar ,Thalapuriswarar ,Thirukulam ,Pottalam ,
× RELATED காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற கோரிக்கை