×

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

வாஸ்து தோஷத்திற்கு என்ன பரிகாரம்?

?எங்கள் வீடு கட்டி 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அக்னி மூலையில் படுக்கை அறையும் தென்கிழக்கு மூலையில் சமையல் அறையும் மாறி அமைந்துவிட்டதாகவும் மனையடி சாஸ்திரப்படி வீடு இல்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் காசு தங்குவதில்லை. மருத்துவச் செலவும் அதிகமாகிறது. இதற்கு என்ன பரிகாரம் உள்ளது? வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டுமா? என் ஆயுட்காலம் எப்படி உள்ளது?
- நாராயணசாமி, கோயமுத்தூர்.

அக்னி மூலை என்பதும் தென்கிழக்கு மூலை என்பதும் ஒன்றுதான். தென்கிழக்கு மூலையில் சமையல் அறை இருக்கிறது என்றால் அது அக்னி மூலையில்தான் அமைந்திருக்கிறது. வீணாகக் குழப்பிக்கொள்ளாதீர்கள். அத்துடன் வீடு கட்டி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். வீட்டில் காசு தங்குவதில்லை என்றும் மருத்துவச் செலவு அதிகமாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

77 வயதினைக் கடந்த நிலையில் வாழ்வினில் எத்தனையோ அனுபவங்களைப் பார்த்திருப்பீர்கள். ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக கணிதத்தின்படி தற்போது புதன் தசை முடிவிற்கு வந்து கேது தசை என்பது துவங்க உள்ளதை அறிய முடிகிறது. கேது உங்கள் ஜாதகத்தில் சத்ரு, ரோக, ருண ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நீங்கள் உடல்நிலையில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்த நேரத்தில் வீட்டை ரிப்பேர் செய்யும் முயற்சியில் இறங்கக் கூடாது. அத்துடன் வீடு கட்டி 25 ஆண்டுகள் ஆகும் நிலையில் வாஸ்து தோஷம் என்பது பெரிய அளவில் உங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. வாஸ்து சரியில்லை என்பதற்கு நீங்கள் சரியான காரணத்தையும் குறிப்பிடவில்லை. வாஸ்து தோஷம் உள்ளது என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் அதற்குரிய பரிகாரமாக உங்கள் வீட்டு புரோஹிதர் அல்லது சாஸ்திரம் கற்றறிந்த பண்டிதர்களைக் கொண்டு ஹோமம் மற்றும் பூஜைகளைச் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய ஜாதக கணிதத்தின்படி தற்போதைய சூழலில் வீடு சம்பந்தப்பட்ட பணிகள் எதையும் துவக்கு வதற்கு இது உகந்த நேரமல்ல என்பதையும் உங்களுடைய உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ளவேண்டியது அவசியம் என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

?எனக்கு பெற்றோர் சரியில்லை. உணவிற்குக் கூட வழியின்றி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டு வேலை மற்றும் கடைகளில் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றுகிறேன். தற்கொலை முயற்சியிலும் பலன் இல்லை. என் திருமணம் எவ்வாறு அமையும்? அதன் பிறகாவது நல்வாழ்வு கிடைக்குமா? பிரச்சினைகள் எப்போது தீரும்?
-    பண்ருட்டி வாசகி.

இளமையில் வறுமை என்பது மிகவும் கொடியது என்பார்கள். அதிலும் நீங்கள் பெண்பிள்ளை வேறு. பெற்றோர் பொறுப்பற்ற முறையில் குடிப்பிரியர்களாக உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தற்கொலை என்பது பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்காது. இளம்வயதில் வாழ்க்கையில் சிரமத்தினை சந்திப்பவர்கள் எதிர்காலத்தில் சாதனையாளர்களாக மாறியுள்ளதை நாம் காண இயலும். உங்களுடைய ஜாதகமும் அப்படிப்பட்ட பலனைத் தருவதாகவே அமைந்துள்ளது என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள்.

நீங்கள் அனுப்பியிருக்கும் விபரங்களைக் கொண்டு உங்கள் ஜாதகத்தை கணிதம் செய்து பார்த்ததில் சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ளீர்கள் என்பதும் தற்காலம் குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது என்பதும் தெளிவாகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் ஜென்ம லக்னாதிபதி சுக்கிரனும், ஜென்ம லக்னத்தில் ஜீவன ஸ்தானாதிபதி சந்திரனும் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருப்பது உங்களை கடுமையான உழைப்பாளியாக உருவெடுக்கச் செய்யும். உண்மையாக உழைத்து முன்னேறுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்.

வீட்டு வேலைகள் செய்வதை விடுத்து ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்து அந்த தொழிலைக் கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். உங்களுடைய முயற்சியின் மூலமாகவும் தன்னம்பிக்கையுடன் கூடிய நிர்வாகத் திறமையின் மூலமாகவும் நீங்கள் ஒரு தொழிலதிபராக உருவெடுக்கும் வாய்ப்பும் உண்டு. திருமண வாழ்வினைப் பொறுத்தவரை ஏழாம் பாவகம் ஆகிய களத்ர ஸ்தான அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பதால் சுறுசுறுப்பும் வேகமும் நிறைந்த இளைஞர் ஒருவர் உங்கள் வாழ்க்கைத்துணைவராக அமைவார். அவர் உங்கள் முயற்சிகளுக்குத் துணை நிற்பவராக இருப்பார்.

உறவுமுறையில் திருமணம் அமையாது. வெளிமனிதராக இருப்பார். தற்போதைய சூழலில் திருமணத்தைப்பற்றி அதிகம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் வேலையில் சேர்வதற்கு முயற்சி செய்யுங்கள். 03.02.2021 முதல் ஒரு புதிய பயணம் உங்கள் வாழ்வினில் துவங்கும். 21.03.2023க்கு மேல் திருமணத்திற்கான வாய்ப்பு தேடி வரும். 25வது வயது முதல் 44வது வயது வரை கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். 44வது வயதில் நீங்கள் மிகப்பெரிய தொழிலதிபராக உருவெடுத்திருப்பதை இந்த உலகம் காணத்தான் போகிறது என்பதையே உங்கள் ஜாதகம் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

?நான் தற்சமயம் கூலிக்கு வெள்ளி கொலுசு செய்யும் தொழில் செய்து வருகிறேன். செய்யும் தொழிலை நம்பி வீட்டின் பெயரில் வங்கிக்கடன் பெற்று தொழில் செய்து அதில் நஷ்டம் அடைந்து கடன் கட்ட முடியாத சூழலில் உள்ளேன். இதே தொழிலை தொடர்ந்து செய்யலாமா, அல்லது வேறு தொழில் செய்யலாமா? வீட்டை விற்றுத்தான் கடனை அடைக்க வேண்டுமா? மனஅமைதி இன்றி தவிக்கும் எனக்கு விடை தாருங்கள்.
-  செந்தில்குமார், சேலம்.

உங்கள் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணிதம் செய்து பார்த்ததில் உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ளீர்கள் என்பது தெளிவாகிறது. ஜென்ம லக்னாதிபதி குரு இரண்டாம் வீட்டில் நீசம் பெற்றாலும் உடன் சந்திரனும் சுக்கிரனும் இணைந்திருப்பது வலிமையான நிலையே ஆகும்.

அத்துடன் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே சூரியன், புதன் மற்றும் ராகு ஆகியோர் இணைந்துள்ளனர். தற்போது குரு தசையில் சூரிய புக்தி நடந்து வரும் நிலையில் நீங்கள் வாழ்வியல் நிலையில் மாற்றத்தைப் பற்றி சிந்திக்கத் துவங்கியுள்ளீர்கள். கூலிக்கு வேலை செய்வதை விடுத்து அதே துறையில் மார்க்கெட்டிங் அல்லது கமிஷன் ஏஜெண்ட் ஆக வேலை செய்யலாம். வெள்ளி சம்பந்தப்பட்ட வியாபாரம் என்பது நிச்சயம் கைகொடுக்கும். அதில் தயாரிப்புதொழிலைச் செய்யாமல் அலைந்து திரிந்து செய்யக்கூடிய ஏஜெண்ட் பணியைச் செய்யலாம்.

பெரிய கடைகளில் இருந்து நிறைய ஆர்டர்கள் வந்து சேரும். அந்த ஆர்டர்களை உரிய பணியாளர்களிடம் கொண்டுசேர்ப்பதும் பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட உருப்படிகளை கடைக்காரர்கள் அல்லது வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் உங்கள் பணியாக அமைந்தால் நன்றாக சம்பாதிக்க இயலும். சுருங்கச் சொன்னால் முதலீடு இன்றி பணியாற்றுவதே உங்கள் தொழிலாக அமைந்துள்ளது. வருகின்ற 01.02.2021 முதல் நல்லதொரு மாற்றத்தினைத் தொழில்முறையில் காண்பீர்கள்.

புத்தாண்டு பிறந்து மூன்று மாத காலத்திற்குள் செய்யும் தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பதோடு கடன்பிரச்சினைகளை சமாளிக்க இயலும் என்ற நம்பிக்கையையும் பெறுவீர்கள். வீட்டை விற்க வேண்டிய அவசியம் உண்டாகாது. நல்ல பேச்சுத்திறமையும், தொழிலில் நாணயத்தையும் கொண்டிருக்கும் உங்களுக்கு எதிர்காலம் என்பது நன்றாகவே உள்ளது. கவலையைத் துறந்து செய்யும் தொழிலில் துறையினை மாற்றிக் கொள்ளாமல் அதே துறையில் வேறுவிதமான பணியினைச் செய்வதன் மூலம் வெற்றியினைக் காண்பீர்கள் என்பதையே உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது.

?கடந்த மூன்று ஆண்டுகளாக எனது வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு எனக்கு சாதகமாக முடிந்தால்தான் நான் பணிக்கு மீண்டும் திரும்ப இயலும். இந்த வழக்கு எனக்கு சாதகமாக எப்போது முடிவிற்கு வரும்?
- பாலு, திருப்பத்தூர்.

வழக்கிற்கான காரணம் என்ன என்பதையும் தவறு யார் மீது உள்ளது என்பதையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள். செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற விதி எல்லோருக்கும் பொருந்தும். நீங்கள் அனுப்பியிருக்கும் விபரங்களைக் கொண்டு ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்திருக்கிறீர்கள் என்பதும் ஏழரைச் சனியின் காலத்தில் பழிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

உங்கள் ஜாதகத்தில் வழக்கு வியாஜ்ஜியங்களைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பது பிரச்னையைத் தந்தாலும் ஆறாம் வீட்டின் அதிபதி ஆகிய செவ்வாய் வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் வழக்கினில் வெற்றி பெறுவீர்கள் என்பது உறுதி. தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தியின் காலம் நடந்து கொண்டிருப்பதாலும் ஜென்மராசியில் இருந்து சனி விலகுவதாலும் சாதகமான நேரத்தினைக் காண உள்ளீர்கள். வழக்கறிஞர் மூலமாக வழக்கினை விரைந்து முடிக்க துரிதப்படுத்துங்கள்.

உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சூரியன், குரு, ராகு ஆகியோரின் இணைவு நல்ல பலத்தினைத் தந்திருக்கிறது என்பதால் நிச்சயமாக உத்யோக பலம் உண்டு என்பதும் நல்ல சம்பாத்யம் உண்டு என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அறிந்தோ அறியாமலோ நீங்கள் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் தேட முயற்சி செய்யுங்கள். வியாழன்தோறும் குருபகவானை வழிபட்டு வாருங்கள். 2021ம் ஆண்டின் இறுதிக்குள் வழக்கு சாதகமான முடிவிற்கு வந்து உத்யோக பலமும் வந்து சேரும் என்பதையே உங்கள் ஜாதகம் தெரிவிக்கிறது.

?என் வயது 50. ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். 1999 முதல் 2016 வரை ஜவுளிக்கடை நடத்தி வந்தேன். தொழிலில் நஷ்டமடையவே 2017 முதல் தற்போது வரை சென்னையில் ஜவுளி கடையில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறேன். சொந்த ஊரில் பலசரக்கு வியாபாரம் வீட்டிலிருந்தே செய்யலாம் என்ற எண்ணம் உள்ளது. தங்கள் மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.
- சுப்புராயலு, ஸ்ரீவில்லிபுத்தூர்.

தொழில்முறையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்தாலும் தொடர்ந்து முயற்சித்து வரும் உங்கள் தன்னம்பிக்கை பாராட்டுதலுக்கு உரியது. உங்கள் ஜாதகத்தை கணிதம் செய்து பார்த்ததில் தற்போது குரு தசையில் ராகுபுக்தியின் காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள் என்பது தெரிய வருகிறது. கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் ஆகிய குரு எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது சாதகமான நிலை அல்ல.

அதிலும் தற்போது குருவே உங்கள் தசைக்கு அதிபதியாக உள்ளதால் இந்த நேரத்தில் நிச்சயமாக நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கும். அத்துடன் நீங்கள் சுயதொழில் செய்வதை விட மற்றவர்களிடம் ஆலோசனை சொல்லும் பணியாளராக இருப்பதே நல்லது. தற்போது நீங்கள் பார்த்து வரும் உத்யோகம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவே அமைந்துள்ளது.

செய்கின்ற பணியில் உங்கள் முழுத்திறமையையும் நேர்மையையும் வெளிப்படுத்தி வாருங்கள். சொந்த ஊரில் பலசரக்கு கடை வைக்கும் முயற்சி வேண்டாம். தற்போதுள்ள பணியில் இறுதி வரை தொடர்வது நல்லது என்பதே உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் சொல்லவேண்டிய ஆலோசனையாக அமைந்திருக்கிறது.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

சுபஸ்ரீ சங்கரன்

Tags :
× RELATED இயற்கை வடித்த லிங்கம்