
ஐதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு காசி செட் போடப்பட்டிருக்கிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்கள். இந்த பான் இந்தியா படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. தற்போது ஒடிசாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஐதராபாத்தில் உள்ள அலுமினியம் பேக்டரி வளாகம் ஒன்றில் காசியை போன்றே செட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் 90 சதவீத வேலைகள் முடிந்துவிட்டது. ஒடிசாவிலிருந்து படக்குழு திரும்பியதும் இந்த செட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதற்காக 600 துணை நடிகர்கள் இங்கு வரவழைக்கப்பட உள்ளனர். முன்னதாக இந்த காசி செட்டை படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர். ஆனால் சிலர் இதை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பரப்பிவிட்டிருக்கிறார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
