×

நஷ்டத்தை தாங்கிய விஜய் சேதுபதியின் கஷ்டம்

சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த ஒரு பேட்டி வைரலானது. காரணம், அவர் தனது நஷ்டத்தையும், கஷ்டத்தையும் வெளிப்படையாக பேசியிருந்தார். அவர் கூறுகையில், ‘தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாக இல்லை. ‘சங்குத்தேவன்’ படத்தில் ஒப்பந்தமானேன். திடீரென்று தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நான் தயாரித்தேன். கதை பிடித்தது. ஒருவர் பைனான்ஸ் செய்கிறார், நான் காப்பி ரெடி செய்து கொடுக்கப் போகிறேன் என்று தொடங்கினேன். சில காரணங்களால் படத்தை தயாரிக்க முடியவில்லை.

அதில் எனக்கு 1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதில் எனக்கு சம்பளம் 15 லட்ச ரூபாய். பிறகு `ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை நண்பருடன் இணைந்து தயாரித்தேன். அது நஷ்டமானபோது, எனது பங்கின் நஷ்டத்தை அளித்தேன். `ஜூங்கா’ படம் நஷ்டம் அடைந்தது. பிறகு தயாரித்த `மேற்குத்தொடர்ச்சி மலை’ படமும் நஷ்டமானது. `லாபம்’ படமும் நஷ்டத்தையே சந்தித்தது. பிறகு ‘முகிழ்’ என்ற ஒரு மணி நேர படத்தை தயாரித்து நானும், எனது மகள் ஜாவும் நடித்தோம். அது ஓரளவு லாபம் கொடுத்தது.

படம் நஷ்டம் அடைந்தால், அந்த கடனை அடைத்துவிட்டு, மீண்டும் படம் தயாரிப்பதுதான் எனது வழக்கம். என் மனதுக்கு பிடித்த படங்களை என்னால் தயாரிக்க முடிகிறது என்ற மகிழ்ச்சிதான் முக்கியம். இவ்வளவு நஷ்டத்தை நான் சந்தித்தாலும், படம் தயாரித்ததற்காக நான் வருத்தப்பட்டது இல்லை. எனக்கு `ஆரஞ்சு மிட்டாய்’, `ஜூங்கா’, `மேற்குத்தொடர்ச்சி மலை’, `லாபம்’ ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். பணம் சம்பாதிப்பதில் இருக்கும் வசதி என்னவென்றால், நமக்கு பிடித்ததை நம்மால் செய்ய முடியும் என்பதுதான்’ என்றார்.

Tags : Vijay Sethupathi ,Vijay Sedupathi ,
× RELATED கெணத்த காணோம் விமர்சனம்…