×

நற்குணத்தின் உன்னதம் இறைத்தூதர்

அன்னை ஆயிஷா கொதிக்கிறார்கள். கோபத்தால் துடிக்கிறார்கள். என்ன காரணம்? அன்றைய மதீனாவில் நபிகளாரின் கடைந்தெடுத்த  பகைவர்களாக இருந்தவர்கள் யூதர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நபிகளாரைத் துன்புறுத்திக் கொண்டும் அவதூறு பரப்பிக்கொண்டும் இருந்தார்கள். ஒருநாள் இறைத்தூதரை இழிவுபடுத்த வேண்டும் என்று ஒரு சூழ்ச்சி செய்தார்கள். ஸலாம் சொல்வதன் மூலம் தங்களின் திட்டத்தை  நிறைவேற்றினார்கள். நபிகளாரைச் சந்திக்க வந்த யூதர்கள், “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று சொல்வதற்குப் பதிலாக வார்த்தையை சற்றே மாற்றி,  “அஸ்ஸாமு அலைக்கும்” (உங்கள் மீது சாவு உண்டாகட்டும்) என்றார்கள்.

“நபிகளார் அழிய வேண்டும்” எனும் கெடு மதியோடுதான் அவர்கள் அப்படிச் சொன்னார்கள். இதை அறிந்த அன்னை ஆயிஷா கோபத்தால் துடிக்கிறார்கள். நபிகளார்(ஸல்) ஆயிஷாவை அமைதிப்படுத்துகிறார்கள்.

“ஆயிஷா...பதறாதே..நான்தான் அவர்களுக்குத் தக்க பதில் சொல்லி விட்டேனே” என்று கூறுகிறார் நபிகளார். நபிகளார் அளித்த பதில் என்ன?

“உமக்குச் சாவு வரட்டும்” என்று  சொன்ன யூதர்களின் தலைகளைக் கொய்துவிட்டார்களா? இல்லை. மஸ்ஜிதுன் நபவியில் கட்டிவைத்துச் சாட்டையடி கொடுத்தார்களா? இல்லை. தோழர்களையெல்லாம் அழைத்து, “என்னை இழிவு படுத்திய இந்தக் கயவர்களின் மாறுகை மாறுகால் வெட்டுங்கள்” என்று உத்தரவிட்டார்களா? இல்லை..

பின்னே?

“வ அலைக்க”(உங்கள் சாபம் உங்களுக்கே திரும்பட்டும்) எனும் ஒற்றைச் சொல்லை மட்டுமே பதிலாக உதிர்த்தார் அந்த உத்தம நபி. இத்தனைக்கும் இந்த நிகழ்வு நடந்தபோது மதீனாவின் ஆட்சியாளர் நபிகளார்(ஸல்) அவர்கள்தாம். அவர் நினைத்திருந்தால் என்ன  தண்டனை வேண்டுமானாலும் அளித்திருக்கமுடியும். ஆனால் நபிகளார் அவர்களை  மன்னித்துவிட்டார்.

இதேபோல் இன்னொரு நிகழ்வு. கைபர் எனும் இடத்தில் ஒரு யூதப்  பெண் நபிகளாருக்கும் தோழர்களுக்கும் விருந்து அளித்தாள். நபிகளாரைக் கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் இறைச்சியில் விஷம் கலந்து வைத்துவிட்டாள். இறைச்சியை வாயில் வைத்த உடனே அதில் நஞ்சு கலந்திருப்பது நபிகளாருக்குத் தெரிந்துவிட்டது. உடனே தம் தோழர்களை நோக்கி,  விருந்தைச் சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் ஒரு தோழர் மட்டும் ஒன்றிரண்டு கவளங்கள் சாப்பிட்டுவிட்டார்.

அந்த யூதப் பெண் அழைத்து வரப்பட்டாள். சட்டப்படி விசாரணை தொடங்கியது. தன் குற்றத்தை அவள் ஒப்புக்கொண்டாள். இறைச்சியில்  நஞ்சு கலந்தது உண்மைதான் என்றும், நீங்கள் இறைத்தூதரா இல்லையா என்று சோதிக்கவே அவ்வாறு செய்ததாகவும் கூறினாள். இறைத்தூதர் அவளை மன்னித்து
அனுப்பிவிட்டார். ஆனால்  விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட தோழர் உடல்நலம் குன்றினார். சிகிச்சை பலனின்றி  உயிர் இழந்தார். இந்த முறை அந்த யூதப் பெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

இதிலிருந்து ஒரு செய்தி தெளிவாகிறது. தனிப்பட்ட முறையில் தமக்குத் தீங்கு செய்தவர்களை, பழித்தவர்களை, அவதூறு சுமத்தியவர்களை இறைத்தூதர் பழிவாங்கியதே இல்லை. அதே சமயம் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆட்சியாளர் எனும் முறையில் தண்டனை வழங்கவும் தயங்கியதில்லை. நபிகளாரிடம் பத்து ஆண்டுகள் பணியாளராக வேலை பார்த்தவர் அனஸ் எனும் தோழர். அவர் கூறுகிறார்: “இந்தப் பத்து ஆண்டுகளில் நபிகளார் ஒருமுறைகூட என்னைச் ‘ச்சீ’ என்று கடிந்து பேசியதில்லை. கோபித்ததும் இல்லை.”இறைத்தூதரின் இனிய பண்பு நலன்களை நாமும் பின்பற்றுவோம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED இயற்கை வடித்த லிங்கம்