1. திருவண்ணாமலை படைவீடு
பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குரிய தலமான திருவண்ணாமலையில் விநாயகரின் முதல் படைவீடு இருக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய நுழைவாயிலுக்கு அருகாமையில் உள்ளே வடக்கு நோக்கிய சந்நதியில் கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார் அல்லல்போம் விநாயகர் என்கிற வினை தீர்க்கும் விநாயகர். இவ்வாலயத்தின் பிராகாரங்களில், ராஜ கோபுர விநாயகர், சிவகங்கைத் தீர்த்த விநாயகர், வன்னிமர விநாயகர், ஆணை திறைகொண்ட விநாயகர், ஆலமர விநாயகர், விஜய விநாயகர் எனப்பல விநாயகர் சந்நதிகள் இருப்பினும் இந்த வினை தீர்க்கும் விநாயகர் தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றி வழிபடப்பட்டு வருகிறார். அத்துடன், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படைவீடு ஆகக் கொள்ளப்படும் சிறப்பையும், வினைதீர்க்கும் விநாயகர் சந்நதி பெறுகிறது. அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.
2. விருத்தாச்சலம் படைவீடு: கடலூர்
ஐந்து கொடி மரங்கள், ஐந்து கோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள், ஐந்து விநாயகர் சந்நதிகள், ஐந்து நந்திகள் என எல்லாமே, ஐந்து ஐந்தாக உள்ள கோயில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்திலுள்ள பழமலை நாதர் கோயில் ஆகும்.‘விருத்தம்’ என்றால் பழமை; ‘அசலம்’ என்றால், மலை என்று பொருள். இதனாலேயே பழமை மலை என்பதே பழையமலை என மாறி பழமலை என சுருங்கிற்று.பழமலை நாதர் என்ற பெயரில் இங்கு சிவபெருமான் திருநாமம் கொண்டுள்ளார். திருவண்ணாமலைப் போன்றே இங்கும், மலை வடிவில் மகேஸ்வரன் முதலில் தோன்றினார். சுந்தரநாயனாரை, ஆட்கொண்டு தேவாரம் பாட வைத்து, 12 ஆயிரம் பொற்காசு வழங்கினார். காசி போல, விருத்தாச்சலமும் முக்தி தலமாக விளங்குகிறது. இத்தல நுழைவுவாயில் அருகேயுள்ள கோயில் கொண்டுள்ள ஆழத்துப் பிள்ளையார்.
இரண்டாவது படைவீட்டு நாயகர் ஆவார்.
பெயருக்கு ஏற்றார்போல் கோயிலின் முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் பதினெட்டு அடி ஆழத்தில், அமர்ந்திருக்கிறார் இத்தல விநாயகர். இதனாலே ஆழத்துப்பிள்ளையார் என பெயர் வரலாயிற்று. பெயருக்கேற்றவாறு ஆழத்தில் சந்நதி கொண்டுள்ளார். படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றுதான் விநாயகரை தரிசிக்கவேண்டும். இவரை வணங்கினால் கல்வியும் செல்வமும் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. சிவன் ஆலயத்தில் இருந்தாலும், இவருக்குத் தனிக் கொடிமரமும், தனியான விழாவும் நடத்தப்படுகிறது.
3.திருக்கடவூர் படைவீடு: நாகை
விநாயகரின் படைவீடுகளில் மூன்றாவதாக இருப்பது திருக்கடவூர் கள்ளவாரணப்பிள்ளையார். சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக காலனையே காலால் உதைத்த திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிவன் சந்நதியின் நந்திக்கு வலதுபுறம், இந்தப் பிள்ளையார் சந்நதி அமைந்துள்ளது. இது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட சந்நதியாகும். அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமிப்பட்டர், இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ளவிநாயகர்பதிகம், இவரது சிறப்பினைக் கூறும். கள்ள வாரணப்பிள்ளையார் தனது துதிக்கையில் அமிர்தகலசம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். அமிர்தகலசம் பெற்ற தேவர்கள், தம்மை வழிபட மறந்ததால், அமிர்தகலசத்தை இவர் மறைத்து விளையாடினார் என்பதால் தான் இவருக்கு கள்ளவாரணப் பிள்ளையார் எனப்பெயர் உருவாயிற்று. செல்வவளம், கல்யாணவரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் போன்றவற்றை அருளும் கருணாமூர்த்தியாக, கள்ள வாரணப்பிள்ளையார் காட்சியளிக்கிறார்.
4. மதுரை படைவீடு:
நான்காவது படைவீடு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் நுழைவு மண்டபத்தில் வீற்றிருக்கும் சித்திவிநாயகர் சந்நதி. மீனாட்சி அம்மன் சந்நதியின் நுழைவு வாயிலின் இடதுபுறமாக இந்தக் கணபதி கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். மாணிக்கவாசகப் பெருமான், பாண்டிய மன்னன் விருப்பப்படி, குதிரை வாங்கச் செல்லும்போது இந்த சித்திவிநாயகரை வணங்கிவிட்டுச் சென்றதாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவர் என்று அறியலாம். சகல காரியங்களிலும் வெற்றியளிக்கும் சித்திவிநாயகராக, இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும், அவப்பெயர் நீங்கும்.
5. பிள்ளையார்பட்டி படைவீடு: சிவகங்கை
விநாயகரின் ஐந்தாவது படைவீடு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலாகும். விநாயகப் பெருமானின் மிகப்பிரம்மாண்டமான ஆலயமாகக் கருதப்படுவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். இவர், சிவலிங்கத்தைக் கையில் வைத்து பூசை செய்கின்றார்.
இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் துண்டிராச விநாயகர் எழுந்தருளியிருக்கிறார். எல்லா பேறுகளைப் பெற்றாலும் இறுதியில் நமக்குத் தேவைப்படுவது வீடுபேறு ஆகும். இதனை அருள்பவராக காசி துண்டிராச கணபதி திகழ்கிறார். காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு முன்பு, துண்டிகணபதியின் ஆலயம் உள்ளது.
சிறிய கோயில் என்றாலும் புகழ்பெற்று உள்ளது. சிறிய தெருவில் கடைகளுக்கு இடையே கோயில் கொண்டுள்ள கணபதி அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காணப்படுகிறார். இவருக்குச் செந்தூர வர்ணத்தில், குங்கும அபிஷேகம் செய்வதால், இப்படிக் காட்சியளிக்கிறார். பக்தர்கள் ‘‘துண்டி மகராஜ்’’ என்று பரவசத்தோடு அழைக்கிறார்கள். காசிக்கு வருபவர்கள். இந்தக் கணபதியிடம் உத்தரவு பெறாமல் சிவனை வணங்கவோ, ஊரைவிட்டுச் செல்லவோ கூடாது என்பது மரபு. ஞானத்தின் திருஉருவான இவர், தீட்சாகணபதியாக இருந்து ஞானத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். காசிக்குச் சென்று, துண்டிப்பிள்ளையாரை வணங்க முடியாதவர்கள், பிள்ளையார் பட்டிகணபதியை வணங்கி அதே அருளைப் பெறலாம் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள்.
6. திருநாரையூர் படைவீடு: கடலூர்
விநாயகரின் ஆறாவது படைவீடாக இருப்பது, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் அருகேயிருக்கும் திருநாரையூரில் உள்ளது. திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் ஆலயத்தின் இடப்பக்கம் உள்ள சந்நதியில் கோயில் கொண்டுஅருள்கிறார் பொல்லாப்பிள்ளையார். பொல்லுதல் என்றால் செதுக்குதல் என்று பொருள். உளிக்கொண்டு செதுக்கப்படாதவர் என்பதால் இந்த பிள்ளையார்பொல்லாப்பிள்ளையார் என்று போற்றி வணங்கப் பெறுகிறார். நம்பியாண்டார்நம்பி மூலம், ராஜராஜசோழனுக்குத் தேவாரத் திருமுறைகள் கிடைக்கச் செய்தவர், இந்தப் பிள்ளையார் தான், இவரை வணங்கிட, கல்வியும், ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம்.வலம்புரி விநாயகராகக் காட்சி தருகிறார்.
- சு. இளம் கலைமாறன்
