×

மார்கழி மாதம் பிள்ளையார் பிடித்து கோலம் போடுவது ஏன்?

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் மார்கழி மாதம் முழுவதும் வாசலில் கோலமிட்டு சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பது ஏன்? என்பதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

பின்னர் கோலத்தில் சாணத்தை பிள்ளையாராக பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப்பூவை அழகுப்பட வைப்பார்கள்.  அதைச் சேகரித்து வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு வழிபடுவார்கள். இதனை சிறு வீட்டு பொங்கல் என அழைப்பர். பின்னர் சேகரித்த சாண உருண்டைகளை நீர் நிலைகளில் சேர்ப்பார்கள். பசு மாட்டின் சாணம் அற்புத பலன்களைத் தரும் ஒப்பற்ற கிருமிநாசினி. நம் வீட்டைச் சுற்றிப் பரவியிருக்கும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி கொண்டது. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களினால் நோய் தொற்றுகள் ஏற்படும்.

இதை தவிர்க்கவே சாணத்தில் மகாலட்சுமி உறைவதாகவும், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்தால் நல்லது என்றும் கூறி வாசலில் சாணத்தைக் கரைத்து தெளிப்பதை பழக்கமாக்கினர் நம் முன்னோர்கள். பாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருஷேத்திர யுத்தம் மார்கழி மாதத்தில்தான் நடந்தது. பாண்டவர்களின் சேனைகள் தங்கியிருந்த வீடுகளை அடையாளம் கண்டு கொள்வதற்காக வியாசர் வீட்டுவாசலில் சாணம் இட்டு பூ வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தாராம்.

அதை அடையாளமாக கொண்டு போர் நடக்கும் சமயத்தில் பாண்டவர்களுடைய சேனைகளின் வீடுகளை கௌரவர்கள் தாக்காமல் இருப்பதற்காக கண்ணபிரான் பாதுகாப்பு அளித்தார். அன்று முதல் இந்தப்பழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடுவதால், மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும். இப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடைய நல்ல விஷயங்களை கொண்டுள்ள மார்கழி மாதக் கோலங்களால் பெண்களின் கற்பனைத் திறன் மேம்படும்.

- ஏ.எஸ். கோவிந்தராஜன்

Tags : Pillaiyar ,
× RELATED இந்து,முஸ்லிம்கள் இணைந்து நடத்திய பொன் ஏர் விடும் விழா