×

மனநோய் தீர்த்து மன அமைதி தரும் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்

திருச்சி- சேலம் ரோட்டில் திருச்சியில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் . மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி. உற்சவர் ஸ்ரீனிவாசர்.

தல வரலாறு:


திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன் ஒருவனிடம், பெருமாளை ஒப்படைத்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு சென்று விட்டார்.அப்போதுகுணசீலம் காடாக இருந்தது. வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டன.பயந்துபோன சீடன் அங்கிருந்து ஓடி விட்டான். காலப்போக்கில் பெருமாள் சிலையை புற்றுமூடிவிட்டது. ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. அப்போது தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால்மறைந்தது.

தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி,புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான்.இதனால் இக்கோயில் பிரசன்ன வெங்கடாஜலபதி எனப் பெயர் பெற்றது.பன்னிரு கருடசேவை: கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி கிடையாது. பரிவார மூர்த்திகளும் இல்லை. உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்கசெங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது.

சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். பெரும்பாலான கோயில்களில் விழாவின்போது மட்டுமே, சுவாமி கருடசேவை சாதிப்பார்.இக்கோயிலில் ஒவ்வொருமாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார். வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு. தென்திருப்பதி என போற்றப்படும் குணசீலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். நாளை முதல் புரட்டாசி சனியை யொட்டி சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறுகிறது.மனக்குழப்பத்திற்கு தீர்வு: மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. மனநோயாளிகளுக்கு காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.

கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியதாக கூறப்படுகிறது.பிரசன்ன வெங்கடாஜலபதியை வேண்டினால் பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு நீங்கும், மன நிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Tags : Prasanna Venkatajalapatti Temple ,
× RELATED இயற்கை வடித்த லிங்கம்