×

காரடையான் நோன்பு இனிப்பு அடை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு (பதப்படுத்தியது)  - 1 கப்
காராமணி (தட்டைப் பயிறு)  - ¼ கப்
மண்டை வெல்லம் (தூளாக்கியது) -  ¾ கப்
தேங்காய்த் துருவல் -  ½ கப்
ஏலக்காய் - 2
தண்ணீர்  - 2 கப்
 
செய்முறை:

பச்சரிசி மாவினை பதப்படுத்தும் முறை முதலில் பச்சரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின் அதனை வடிதட்டில் போட்டு வடித்துக் கொள்ளவும். ஊற வைத்த பச்சரிசியை தண்ணீர் நன்கு வடிந்தவுடன் மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் வாயகன்ற பாத்திரத்தில் மாவினைப் போட்டு வறுக்கவும். நன்கு வறுத்தபின் மாவினை சல்லடையில் போட்டு சலித்துக் கொள்ளவும். சல்லடையின் மேற்புறத்தில் உள்ள கப்பியை மிக்ஸியில் போட்டு அரைத்து மீண்டும் சலித்துக் கொள்ளவும். இதுவே மாவினை பதப்படுத்தும் முறையாகும் காராமணியை (தட்டை பயிறு)   வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதனை தண்ணீரில் போட்டு குழைய வேக வைக்கவும். பின் காராமணியில் உள்ள தண்ணீரை வடித்து விடவும். 2 கப் தண்ணீரில் தூளாக்கி உள்ள மண்டை வெல்லத்தை கரைத்துக் கொள்ளவும். பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் வடிகட்டிய சர்க்கரை நீர் கரைசலை தள தள என கொதிக்க வைக்கவும். பின் அதனுடன் குழைய வேக வைத்த காராமணி, தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின் அதனுடன் பதப்படுத்திய பச்சரிசி மாவினை சிறிது சிறிதாக கலவையில் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். மாவுக்கலவை நன்கு சுருண்டு வரும். அதனை இறக்கி மிதமான சூடு இருக்கும்போது கைகளில் எண்ணையைத் தடவிக் கொண்டு மாவுக்கலவையில் சிறுஉருண்டை எடுத்து வடை போல் தட்டவும். இந்த வடைகளை எண்ணெய் தடவிய இலையில் வைக்கவும். இவ்வாறே எல்லா மாவினையும் தட்டவும். பின் அதனை இட்லிப் பானையில் வைத்து அவித்து எடுக்கவும். சுவையான காரடையான் நோன்பு இனிப்பு அடை தயார். இதனை சாவித்திரி விரத வழிபாட்டில் பயன்படுத்தலாம்.

Tags : Caratyan ,
× RELATED காரடையான் நோன்பு உப்பு அடை