அணைக்கட்டு: பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் கிராமத்தில் ஆண்டு தோறும் பொன்னியம்மன் கோயில் தேர்த்திருவிழா நடத்துவது வழக்கம், அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை முன்னிட்டு கடந்த 3ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை கோயிலில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, இரவு வாண வேடிக்கை, மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பொன்னியம்மன் மற்றும் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நேற்று மாலை சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.