திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் படித்திருவிழா நடைபெற்றது. திருச்செங்கோட்டில் பிரசித்திபெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் படித்திருவிழா நேற்று நடைபெற்றது. மலைக்கு செல்லும் சுமார் 1200 படிக்கட்டுக்களை மஞ்சள் குங்குமம் தடவி, பூவைத்து, கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்றும், தங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்த சேர்ந்த நூற்றுக்கணக்கான பஜனை குழுவினர் பாடல்கள் பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். விழாவையொட்டி மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர், ஆதிகேசவப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. அருணகிரிநாதர் திருச்செங்கோடு திருமலையில் கோயில் கொண்ட செங்கோட்டு வேலவர் மீது பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். அதனை நினைவு கூறும் வகையில் இந்த படித்திருவிழா நடந்தது.