- கும்பாபிஷேக விழா
- சேலம்
- இந்து சமய அறநிலையத்துறை
- சேலம் மாவட்டம்
- Kumbabhishekam
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சேலம், ஜூலை 28: சேலம் மாவட்டத்தில், நடப்பாண்டு இறுதிக்குள் 30 கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு இந்து கோயில்களிலும், 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது ஐதீகமாக உள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட நூற்றுக்கணக்கான கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து, சேலம் மாவட்டத்தில் கோயில்களில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன. கோயில்களில் ஆண்டு வருமானத்தை வைத்து தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்கள் முதல்நிலை கோயிலாகவும், ரூ.5 லட்சம் வருமானம் வரும் கோயில் இரண்டாம் நிலை கோயிலாகவும், ரூ.3 லட்சம் உள்ள கோயில் மூன்றாம் நிலை கோயிலாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப கோயில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோயில்களில் தற்போது அன்னதானம் திட்டம், தினசரி பிரசாதம் வழங்கும் திட்டம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம், பல ஆண்டாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்கள் கண்டறிந்து, அந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தவும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை கண்டறிந்து மீட்பது, குத்தகை வராமல் இருந்து நிலங்களுக்கு குத்தகை வர வைத்தல், வாடகை வசூல் என்ன பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல ஆண்டாக கும்பாபிஷேக விழா நடக்காத கிராமப்புற கோயில், பெரிய கோயில்களை கணக்கெடுத்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலம் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டாவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அம்மாப்பேட்டை பலபட்டரை மாரியம்மன், செந்தாரப்பட்டி சக்ரத்தாழ்வார் மற்றும் விநாயகர் கோயில், குமரகிரி தண்டாயுதபாணி, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், நரிப்பட்டி மாயவன் கோயில், பச்சமலை மாயவன் கோயில் என 60க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பாண்டு இறுதிக்குள் 30 கோயில்களில் கும்பாபிஷேக விழா இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
