சோழிங்கநல்லூர், ஜூலை 22: குடும்ப தகராறில் மாமனாரை வெட்டிய மருகமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை ஓட்டேரி ஏகாம்பிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (60). இவரது மனைவி கீதா. இவர்களது மகள் அம்சவேணி (38), மகன் விமல்குமார் (35). சண்முகம் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா, மகள் அம்சவேணி ஆகியோர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர்.
அம்சவேணியின் கணவன் பாலாஜி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு அம்சவேணி 2வதாக சசிதரன் என்பவரை திருமணம் செய்தார். இதனிடையே சசிதரன் மதுபோதைக்கு அடிமையாகி அம்சவேணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து, அம்சவேணி கணவனை விட்டு பிரிந்து கடந்த 9 மாதங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அம்சவேணி காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சசிதரன் அம்சவேணியை குடும்பம் நடத்த வருமாறு கூறி தகராறில் ஈடுபட்டார். இதனை அறிந்த சண்முகம் சசிதரனை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சசிதரன் கத்தியால் தனது மாமனார் சண்முகத்தை வெட்டினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த சண்முகத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சண்முகம் அளித்த புகாரின்பேரில், சென்னை ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து சசிதரன் (எ) அப்பு (38) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post குடும்ப தகராறில் மாமனாரை வெட்டிய மருமகன் கைது appeared first on Dinakaran.
