×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா கொடநாடு பகுதியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் உள்ளே நுழைந்தது. அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை கொலை செய்து பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ், சம்சீர்அலி உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ. ஆறுகுட்டி உட்பட இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஏடிஎஸ்பி-க்கள் வீரபெருமாள், பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், அமமுக நிர்வாகி கர்சன் செல்வம் ஆகியோரிடம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு கடந்த வாரம் கோவை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி இன்று காலை 10.45 மணி அளவில் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் கொடநாடு, கொலை கொள்ளை வழக்கில் பல்வேறு கேள்விகளை கேட்டு துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Poongundran ,Kodanad ,Coimbatore ,Chief Minister ,CBCID ,Sasikala ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...