பரமத்திவேலூர், மே 6: பரமத்திவேலூர் அடுத்துள்ள ஜேடர்பாளையம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம்(55), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, சோழசிராமணிக்கு சென்று விட்டு, மீண்டும் ஜேடர்பாளையம் நோக்கி தனது டூவீலரில் வந்து கொண்டிருந்தார். ஜேடர்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது, பின்னால் வந்த மினி ஆட்டோ, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்தில் சண்முகம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஆட்டோ மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.
