சென்னை: தவெக தலைவரான நடிகர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 3 தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு.
அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன். இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல. உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.
உங்க அன்ப நான் மதிக்கறேன். இனி எப்பவும் மதிப்பேன். அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது. நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க. தப்பே இல்ல.
நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் தனிமனித ஒழுக்கமும் 100 சதவீதம் சமரசமற்றதாத்தான் இருக்கணும் ப்ரெண்ட்ஸ். அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும். இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன். செய்வீங்க, செய்றீங்க.
இவ்வாறு விஜய் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
* தவெகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று நியமித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தவெக கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளை கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடு, கோட்பாடுகள், குறிக்கோள் ஆகியவற்றை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளார்.
இவை அனைத்திற்கும் எதிராக செயல்படுபவர்கள் மீது கழக விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை வடக்கு, மேற்கு, தெற்கு, மத்திய/கிழக்கு ஆகிய 4 மண்டலமாக பிரித்து அதில் உள்ள வருவாய் மாவட்டங்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டல குழுக்கள் ஒவ்வொன்றிலும் 1 பெண் உறுப்பினர் உட்பட மொத்தம் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை என் வாகனத்தில் ஏறவோ, குதிக்கவோ கூடாது appeared first on Dinakaran.
