மேட்டுப்பாளையம், ஏப்.23: மேட்டுப்பாளையம் நகராட்சி 29வது வார்டு பள்ளத்துமேடு பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் நேரில் சென்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், கோடை காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் தாசம்பாளையம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல் appeared first on Dinakaran.
