அரியலூர், ஏப்.22: அரியலூர் நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் மே 15க்குள் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையர்(பொ)அசோக்குமார் தெரிவித்தார்.அனைத்து வணிகநிறுவனங்ளில் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தமிழில் பெயர் பலகை வைக்கப்படாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அரியலூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், இது தொடர்பாக நேற்று வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பொறுப்பு அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் தெரிவித்ததாவது: அரியலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும்.
தமிழ்ப்பெயர் பலகையானது மற்ற மொழிகளைவிட முதன்மையாகவும் மற்ற மொழி எழுத்துகளைவிட பெரிய அளவிலும் பொதுமக்களுக்குப் புரியும் வண்ணம் எழுதப்பட வேண்டும். பெயர்ப் பலகை தமிழில் அமைப்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது முதல் முறை அபராதமும், 2 ஆம் முறை முரண்பாடு கண்டறியப்படின் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில், துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ், வணிகர் சங்க மாநில இணைச்செயலாளர் அமுதன் , அரியலூர் நகர வணிகர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் appeared first on Dinakaran.
