சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை வேளாண் துறை அமைச்சராக வீரபாண்டி ஆறுமுகம் பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 606 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக வீரபாண்டி ஆறுமுகம், அவரது மனைவிகள் ரங்கநாயகி, லீலா மற்றும் மகன்கள் நெடுஞ்செழியன், ராஜேந்திரன், மகள் நிர்மலா, மருமகள்கள் பிருந்தா, சாந்தி ஆகியோருக்கு எதிராக 2004ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து 2006ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது கடந்த 2012ம் ஆண்டு வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்தார். இதையடுத்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுவித்தது சரி எனக் கூறி, அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விட்டாலும், மற்றவர்கள் மீதான வழக்கை விசாரிக்கலாம் எனக் கூறி வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி 2017ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கிடையில், வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் நெடுஞ்செழியனும் இறந்து விட்டார். அவர் மீதான வழக்கும் கைவிடப்பட்டது. வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள், மகள், மகன், மருமகள்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை வெறும் யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவில்லை. சொத்து, நிதி பரிவர்த்தனைகள் குறித்த ஆவண ஆதாரங்களுடன் தான் வழக்கு பதிவு செய்துள்ளது. சொத்துக்கள் தங்கள் சொந்த சம்பாத்தியம் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படும் வாதங்களை ஏற்க முடியாது.
இந்த சொத்துக்கள் சொந்தமாக சம்பாதித்தவையா இல்லையா என்பதை முழுமையான சாட்சி விசாரணைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்த சேலம் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையை சேலம் நீதிமன்றம் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் விடுவிப்பு ரத்து: மீண்டும் விசாரிக்க சேலம் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
