பரமக்குடி : பரமக்குடி அருகே புதுக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 103 மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
தலைமை ஆசிரியை உட்பட நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி யாழினி பள்ளி தோழிகளுடன் பள்ளி வேலை நேரத்தில் அருகில் உள்ள கண்மாயில் குளிக்க சென்ற போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தோழிகள் இருவரும் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் கவனகுறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, தங்களது பெற்றோர்களுடன் பள்ளி நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் சேதுராமன் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உங்கள் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்ததை தொடர்ந்து மாணவ,மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
The post தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
