சோழிங்கநல்லூர்: சென்னை வேளச்சேரி, பவானி நகரை சேர்ந்தவர் மணி. இவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். தற்போது பூச்சுவேலை நடந்து வருகிறது. இந்நிலையில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் (55) மற்றும் பெரியாள் இமானுவேல் (40) ஆகியோர் நேற்று இந்த வேலைக்காக வந்தனர். இவர்கள் சாரம் அமைத்து அதில் ஏறி நின்றவாறு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்த 11 கே.வி உயர் மின்னழுத்த கம்பியில் கை உரசியதில் மின்சாரம் இருவர் மீதும் தாக்கியது. இதில் இருவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து சத்தம் கேட்டு வந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் இருவரையும் பரிசோதித்தனர். இதில் புஷ்பராஜ் (55), ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இமானுவேல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த தகவலின் பேரில் வேளச்சேரி போலீசார் மருத்துவமனைக்கு சென்று இறந்த கொத்தனார் புஷ்பராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.
The post மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பலி appeared first on Dinakaran.
