லக்னோ: ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தங்களது வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும் என்ற உத்தர பிரதேச முதல்வரின் உத்தரவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முஸ்லிம்களுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதில், `வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை வருகிறது.
அன்றைய தினம் ஜும்மா தொழுகைக்கு செல்ல விரும்பும் முஸ்லிம்கள், அதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே தொழுதுகொள்ளுங்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை பள்ளிவாசலுக்குச் தொழச் செல்பவர்கள் வண்ணங்களை தவிர்க்கக் கூடாது’ என்றார். முதல்வரின் கருத்துக்கு விளக்கமளித்துப் பேசிய சம்பல் மாவட்ட அதிகாரி அனுஜ் சவுத்ரி, `ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. அதேசமயம் ஆண்டுக்கு 52 முறை வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும். ஹோலியின் வண்ணங்களை யாரேனும் அசவுகரியமாக உணர்ந்தால், அந்த நாளில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும். வெளியில் வருபவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்; ஏனெனில் பண்டிகைகள் ஒன்றாகக் கொண்டாடப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத நல்லிணக்கம் மற்றும் கடுமையான கண்காணிப்பு தேவை.
ஹோலி கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்துவதற்காக ஒரு மாதமாக அமைதிக் குழுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க விரும்பாதவர்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இஸ்லாமியர்கள் ஈத் பண்டிகைக்காக ஆவலுடன் காத்திருப்பது போல, இந்துக்கள் ஹோலியை எதிர்நோக்குகிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி, இனிப்புகளை பகிர்ந்துகொண்டு, மகிழ்ச்சியை பரப்பி கொண்டாடுகிறார்கள்’ என்றார். உத்தரபிரதேச முதல்வரின் மேற்கண்ட சர்ச்சை உத்தரவால், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
The post ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும்: உத்தரபிரதேச முதல்வரின் உத்தரவால் சர்ச்சை appeared first on Dinakaran.
