பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, அடிதடி வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட போகி பாளையம் லைன் பகுதியில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புளியந்தோப்பு போகி பாளையம் பகுதியை சேர்ந்த வள்ளி (46), புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் (23) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து, அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்: புளியந்தோப்பு வஉசி நகர் 12வது தெருவில், கத்தியுடன் 2 பேர் ரகளையில் ஈடுபடுவதாக புளியந்தோப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர் வெங்கடேசன், அங்கு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்தார். அப்போது, தப்பியோடிய மற்றொரு நபரும் பிடிபட்டார். 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், புளியந்தோப்பு வஉசி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (24), அதே பகுதியை சேர்ந்த ஜோதி ரஞ்சன் (23) என்பதும், ஜோதிரஞ்சனின் மனைவியை கிண்டல் செய்த வழக்கில் ஏற்கனவே அப்பகுதி இளைஞர்களோடு முன்பகை இருந்து வந்ததாகவும், அதற்கு அவர்களை பழிதீர்க்க ஜோதிரஞ்சனும் அவரது நண்பரான சதீஷ்குமாரும் சேர்ந்து திட்டம் தீட்டி அவர்களை வெட்டுவதற்காக குடிபோதையில் கத்தியை எடுத்து வந்து ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களிடமிருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து சதீஷ்குமார் மற்றும் ஜோதிரஞ்சன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று, வியாசர்பாடி காவல் நிலையத்திறகு உட்பட்ட சுந்தரம் பவர் லைன் பகுதியில் கடந்த 8ம்தேதி மதியம் ஆட்டோ ஓட்டுனரான விநாயகம் (42) என்பவரை சரமாரியாக பீர் பாட்டிலால் தாக்கிய வழக்கில், நேற்று முன்தினம் வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்த சீனு (எ) காக்கா சீனு (37) என்பவரை வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்திறகு உட்பட்ட புளியந்தோப்பு, பவுடர் மில்ஸ் சாலையில் சந்தோஷ்குமார் (42) என்ற நபரை சரமாரியாக தாக்கிய வழக்கில் ஏற்கனவே சங்கர் (எ) அறுப்பு சங்கர் மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சூளை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (24), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (எ) தேள் விக்கி (25), தாஸ் (25) ஆகிய 3 பேரை, பேசின்பிரிட்ஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, அடிதடி வழக்கில் 8 பேர் கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.
