×

குட்கா முறைகேடு வழக்கு விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கருக்கு சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உள்பட 27 பேருக்கு எதிராக கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் என்பவர் மரணமடைந்துவிட்டார். எனவே அவருக்கு எதிரான வழக்கை கைவிடப்பட்டு மீதம் உள்ள 26 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணையில் உள்ளது. வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகை காகித வடிவிலும் 492 ஆவணங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை பென்-டிரைவ் மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாதவராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், செந்தில்முருகன், நவநீதகிருஷ்ணன், சேஷாத்ரி, வி.ராமநாதன், ஜோசப் தாமஸ், செந்தில் வேலவன், குறிஞ்சி செல்வன், டாக்டர் லட்சுமி நாராயணன், வி.சம்பத், மனோகர், ஆர்.கே.ராஜேந்திரன் ஆகிய 14 பேர்க்கு ஜனவரி 24ம் தேதி கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கபட்டது.

அன்றைய தேதியில் விசாரணைக்கு ஆஜராகாதவர்கள் மார்ச் 10ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை தொடர்ந்து விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய்பாபா முன்பு நேற்று ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டனர். இதேபோல் கடந்த மாதம் 7ம் தேதி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு வரும் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

The post குட்கா முறைகேடு வழக்கு விஜயபாஸ்கருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Chennai ,Delhi ,CBI ,Tamil Nadu ,AIADMK ,P.V. Ramana ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்