×

லவ் ஜிகாத் கைதுக்கு பயந்து கேரளாவில் தஞ்சம் ஜார்க்கண்ட் தம்பதிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகம்மது காலிப் (28). இவர் தனது ஊரைச் சேர்ந்த ஆஷா வர்மா (27) என்ற இளம்பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்தார். இவர்களது காதல் குறித்து அறிந்த ஆஷா வர்மாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே முகம்மது காலிப் துபாய்க்கு வேலை தேடிச் சென்றார். இந்நிலையில் ஆஷா வர்மாவுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒருவருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இதுகுறித்து அறிந்த முகம்மது காலிப் ஊருக்கு வந்தார்.

தொடர்ந்து கேரளாவில் உள்ள ஒரு நண்பரின் உதவியுடன் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்திற்கு வந்தனர். இங்கு ஒரு வீட்டில் வசித்து வந்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.  இதற்கிடையே முகம்மது காலிப் தங்களது மகளை கடத்தி சென்று விட்டதாகவும், அவர் மீது லவ் ஜிகாத் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஜார்க்கண்ட் மாநில போலீசில் ஆஷா வர்மாவின் பெற்றோர் புகார் செய்தனர்.

இதன்படி முகம்மது காலிப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் கேரளாவில் இருப்பது அறிந்த ஜார்கண்ட் மாநில போலீசார் அவர்களை அழைத்து செல்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் காயங்குளத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் போலீசுடன் செல்ல மறுத்துவிட்டனர்.

இதற்கிடையே தங்களுக்கு பாதுகாப்பு கோரி முகம்மது காலிப்பும், ஆஷா வர்மாவும் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முகம்மது காலிப்புக்கும், ஆஷா வர்மாவுக்கும் பாதுகாப்பு அளிக்க ஆலப்புழா மாவட்ட எஸ்பி மோகனசந்திரனுக்கு உத்தரவிட்டது. பாதுகாப்பில் இருக்கும் காலம் வரை அவர்களை ஜார்க்கண்ட்டுக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்றும் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

The post லவ் ஜிகாத் கைதுக்கு பயந்து கேரளாவில் தஞ்சம் ஜார்க்கண்ட் தம்பதிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Kerala ,High Court ,Thiruvananthapuram ,Mohammed Ghalib ,Asha Verma ,Court ,
× RELATED நாட்டின் விடுதலைக்காக போராடிய...