சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேணடும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஏற்கனவே 2011ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டார்.
பின்னர் 2023ம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டார். சிலரின் தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008ம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, புகார் கொடுத்த விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என்று கேட்டார். இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, புகார் கொடுத்த விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா என்று கேட்டார்.
The post விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
