பிரான்ஸ்: உலக செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உர்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு ஒர்லி நகரில் உள்ள விமான நிலையத்தில் அந்நாட்டு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையிலும் விமான நிலையத்தில் அணிவகுத்து நின்ற ராணுவ இசை வாத்திய குழுவினர் வாத்திய கருவிகளை இசைத்து பிரதமர் மோடியை வரவேற்றனர். விமான நிலையத்தில் குழுமி இருந்த இந்திய வம்சாவழியினர் பிரதமர் மோடியை வரவேற்று முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் தலைநகர் பாரீஸுக்கு சென்ற பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் ஆரத்தழுவி வரவேற்றார். அதை தொடர்ந்து இரவு விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விருந்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி வான்ஸ், சீன துணை அதிபர் ஜாங் கூகின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூகுள் நிறுவனத்தின் தலை செயலதிகாரி சுந்தர் பிச்சை, ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சாம் அல்ட்மேன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து 2 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஏ.ஐ நிர்வகிப்பை பலப்படுத்துதல் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு உலகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வெளிப்படை தன்மையை உறுதி செய்தல் ஆகியவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
The post 2 நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி: ஆரத்தழுவி வரவேற்ற அதிபர் மேக்ரான் appeared first on Dinakaran.
