×

பெண் ஏ.டி.ஜி.பி. அறையில் தீ விபத்து; நாசவேலை காரணம் அல்ல: டி.ஜி.பி. விளக்கம்

சென்னை: ஏடிஜிபி கல்பனா நாயக் விவகாரம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால் தன்னை உயிருடன் தீ வைத்து எரிக்க சதி நடந்ததாக பெண் ஏடிஜிபி புகார் அளித்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி அறையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாக இருந்த கல்பனா நாயக் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில், பெண் ஏ.டி.ஜி.பி. அறையில் தீ விபத்து ஏற்பட்டதற்கு நாசவேலை காரணம் அல்ல என டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். அதில்,

தீ விபத்துக்கு நாசவேலை காரணமல்ல -டிஜிபி

ஏடிஜிபி கல்பனா நாயக் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் நாசவேலை காரணமல்ல என்று டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். துறைரீதியாக முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கல்பனா நாயக்கை கொலை செய்யும் நோக்கத்தில் தீ வைக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அறையில் மின்கசிவு ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக தடயவியல் துறை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறையில் வேண்டுமென்றே தீ வைப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.

திட்டமிட்டே தீ வைப்பு சம்பவம் நடைபெறவில்லை”

தீ விபத்து நடந்த அன்றே விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது. திட்டமிட்ட தீ வைப்பு சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் தலைமையில் நடந்த விசாரணையில் 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. தடயவியல், தீயணைப்பு, மின்துறை சார்ந்தவர்களிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மையுடன் கூடிய பொருட்கள் தீ விபத்தில் கண்டறியப்படவில்லை என ஆய்வில் தகவல்.

ஏடிஜிபி கல்பனா நாயக் புகாரில் உண்மை இல்லை

எஸ்.ஐ. தேர்வு தொடர்பான ஏடிஜிபி கல்பனா நாயக்கின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 750 எஸ்.ஐ.க்கள் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஏடிஜிபி கல்பனா நாயக் கூறிய புகாரில் உண்மை இல்லை.இடஒதுக்கீட்டை எதிர்த்து தேர்வர்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின்படியே தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்து இறுதிப் பட்டியலை வெளியிட்டோம். 2023-ம் ஆண்டு 750 உதவி ஆய்வாளர் தேர்வு பட்டியல் ஜனவரி 30ல் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் மீண்டும் இறுதிப் பட்டியலை அக்டோபர்.3ல் வெளியிட்டது.

 

The post பெண் ஏ.டி.ஜி.பி. அறையில் தீ விபத்து; நாசவேலை காரணம் அல்ல: டி.ஜி.பி. விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,A.D.G.P. ,Kalpana Nayak ,Tamil Nadu Uniformed Services Selection Commission.… ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...