சென்னை: சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கிருத்திகா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில் தங்களது குடியிருப்பு அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் குடியிருப்புவாசிகளுக்கு பெரிய அளவில் தொந்தரவு ஏற்படுகிறது. எனவே, அந்த கடையை அகற்றுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஏற்கனவே கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. அதேபோல் முழு அளவிலான குடியிருப்பு பகுதிகளையும் அத்துடன் இணைத்து விதிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், அந்த குழுவில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளனர் என்று கேட்டனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், மதுவிலக்கு துறை இணை கமிஷனர், சென்னை மாவட்ட கலால் துறை துணை கமிஷனர், டாஸ்மாக் துணை மேலாளர், டாஸ்மாக் சட்ட அதிகாரி, செங்கல்பட்டு மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் உள்ளனர் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த குழுவில் தமிழக டிஜிபி, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் மற்றும் தமிழ்நாடு நகரம் மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆணையர் ஆகியோரையும் சேர்க்க வேண்டும். டிஜிபி தலைமையில் இந்த குழு செயல்பட்டு 6 வாரங்களில் முடிவெடுத்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைப்பதில் கட்டுப்பாடுகள் கொண்டு வர டிஜிபி தலைமையில் குழு: 6 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
