×

பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

 

விருதுநகர், அக்.2: பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாத்தூர் கீழஒட்டம்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவில், சாத்தூர் சிந்தப்பள்ளி அருகே கீழ ஒட்டம்பட்டியில் 1998ல் இந்திரா குடியிருப்பு அரசால் கட்டித்தரப்பட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பில் வசித்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த செப்.28 காலை 6.45 மணிக்கு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் அருகில் உள்ள 35 குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன. அதிகாரிகள் பார்வையிட்டு புதுப்பித்து தருவதாக கூறினர். ஆனால் அனைத்து குடியிருப்புகளும் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்பதால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்.

விபத்து ஏற்பட்ட நாள் முதல் பொது சமுதாய கூடத்தில் தங்கியிருக்கிறோம். வீட்டில் இருந்த பொருட்கள், உடமைகள் என அனைத்தும் சேதமடைந்து விட்டதால், மாவட்ட நிர்வாகம் புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். மேலும் விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து ஆலையை மூட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chatur Geezaottampatti ,Virudhunagar Collector ,Chatur ,Dinakaran ,
× RELATED ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்