×

தேவதானப்பட்டி பகுதியில் மானிய விலையில் மாட்டுத்தீவனங்கள் வழங்க வேண்டும்

*கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் மானிய விலையில் கால்நடைத்துறை மூலம் மாட்டுதீவனங்கள் வழங்கவும் கால்நடை வளர்ப்போர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, காமக்காபட்டி, மஞ்சளாறுஅணை கிராமம், கோட்டார்பட்டி, ஸ்ரீராமபுரம், செங்குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, சாத்தாகோவில்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி, வைகைபுதூர், ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, கதிரப்பன்பட்டி, தர்மலிங்கபுரம், வேல்நகர், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி உள்பட 30கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பில் பால் உற்பத்தி ஒருபுறம், ஆடுகள், கோழிகள் இறைச்சிக்காக வளர்ப்பது ஒரு புறம், கிடைமாடுகள் சானத்திற்காக(தொழுஉரம்) வளர்ப்பது ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

கிடைமாடுகள், எருமைகள், கறவைமாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு, என ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தேவதானப்பட்டி பகுதியில் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த கொரோனா காலங்களில் கறவை மாடுகளை பராமரிக்க முடியாமல் பொருளாதார ரீதியாக அதிகளவில் பாதிப்படைந்தனர். இதில் ஒரு சிலர் கறவை மாடுகளை சொற்ப விலைக்கு விற்றனர்.

இதனால் கறவை மாடுகள் வளர்ப்போருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு, அரசுவங்கி, கூட்டுறவு வங்கி, தனியார் வங்கி, பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களில் கறவை மாட்டு கடன் என, கறவை மாட்டு கடன் வாங்கியவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொரோனா காலங்களில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தற்போது வரை பாதித்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பிடும் போது கறவை மாடுகளுக்கு வாங்கும் புண்ணாக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.15 வரை அதிகரித்து தற்போது குச்சிபுண்ணாக்கு கிலோ ரூ.30க்கும், பருத்தி விதை புண்ணாக்கு கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது. தற்போது பால் கொள்முதல் விலை சற்று அதிகரித்துள்ளதே தவிர பால் உற்பத்தியாளர்களுக்கு அந்த பால் கொள்முதல் விலை உயர்வு போது மானதாக இல்லை.

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும் போது கூலியாட்கள் கூலி 50 சதவிதம் வரை உயர்ந்துள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் 10கும் மேற்பட்ட தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்கின்றனர். தற்போது தேவதானப்பட்டி பகுதியில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தியாகிறது. இந்த பால் அரசு மற்றும் தனியார் பால் நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதிலும் ஒவ்வொரு தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களும் அவர்கள் தேவைக்கேற்ப பால் விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர். ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.30ல் இருந்து ரூ.40வரை கொள்முதல் செய்கின்றனர்.

ஆனால் ஒவ்வொரு கால்நடை வளர்ப்போருக்கும் அவர்கள் வாங்கும் மாட்டு தீவனங்களின் விலை என்பது ஒன்றுதான். இதனால் பால்உற்பத்தியாளர்களுக்கு நிரந்த விலை என்பது இல்லை. இதனால் கறவை மாடுகள் வளர்ப்போர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது தொழிலை மாற்றிவிடுகின்றனர். கறவை மாடுகள் வளர்ப்பு என்பது தற்போது ஒரு நிலையில்லாத தொழிலாக மாறி வருகிறது.

மானிய விலையில் வழங்க வேண்டும்

கால்நடைத்துறை மூலம் கறவை மாடுகள் வளர்ப்போர்கள் பட்டியல் அருகில் உள்ள கால்நடைத்துறை அலுவலங்களில் கணக்கிட்டு பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் யார் யார் என்ன என்ன கால்நடைகள் வளர்த்து வருகின்றனர் என முழு புள்ளிவிபரங்கள் உள்ளது. இதன் அடிப்படையில் பால்உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் அரசு மாட்டு தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கறவை மாடுகள் வளர்ப்போர்கள் இதன் மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.40, குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்து அனைத்து பால் கொள்முதல் நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகளுக்கு நோய் தாக்குதல்

கறவை மாடுகளுக்கு சீசனில் ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க போதிய தடுப்பு நடவடிக்கைகள் தேவைகளை கால்நடைத்துறை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பால் கறக்கும் மாடுகளுக்கு நோய் தாக்கி சரியாகி பின்னர் பால் கறக்கும் போது ஒரு சில மாடுகளுக்கு ஒரு மாதகாலம் ஏற்படுகிறது. இதனால் அந்த ஒரு மாதத்திற்கு வருமானம் இல்லாமல் போய் மருத்துவ செலவு ஏற்படுகிறது. இதனால் அனைத்து வகையிலும் பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.

The post தேவதானப்பட்டி பகுதியில் மானிய விலையில் மாட்டுத்தீவனங்கள் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Kengwarpatti ,G. Kallupatti ,Kamakapatti ,Manchalaru Dam Village ,Kottarapatti ,Sriramapuram ,Sengulathupatti ,Perumalkovilpatti ,Chathakovilpatti ,T. ,Vadipatti ,Erumalainayakanpatti ,
× RELATED தேனியில் ஆயுதப்படை போலீஸ் வேன் மோதி முதியவர் பலி