×

நினைத்ததை எல்லாம் செய்யும் மன்னராட்சி காலத்தில் நாம் இல்லை : உத்தராகண்ட் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெஹ்ராடூன் : சர்ச்சைக்குரிய வனத்துறை அதிகாரியை மீண்டும் முக்கிய பொறுப்பில் நியமித்த உத்தராகண்ட் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தராகண்டின் கார்பெட் புலிகள் சரணாலய இயக்குநராக இருந்த ராகுல் என்ற வனத்துறை அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.வனத்திலிருந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டிய குற்றச்சாட்டில் 2 வருடங்களுக்கு முன்பு கார்பெட் புலிகள் சரணாலய இயக்குநர் பொறுப்பில் இருந்து ராகுல் நீக்கப்பட்டார். இந்த நிலையில், ராஜாஜி புலிகள் சரணாலய இயக்குநராக அதே வன அதிகாரி ராகுலை முதல்வர் புஷ்கர் தாமி நியமித்துள்ளார். இதற்கு அம்மாநிலத்தில் கடும் கண்டனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து ன அதிகாரி ராகுல் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி ஆர் கவாய், பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கே விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய வனத்துறை அதிகாரியை மீண்டும் முக்கிய பொறுப்பில் நியமித்த உத்தராகண்ட் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அவர்கள் பிறப்பித்த உத்தரவில்,”நினைத்ததை எல்லாம் செய்யும் மன்னராட்சி காலத்தில் நாம் இல்லை. மக்களின் நம்பிக்கைக்கு உரிய வகையில் முதலமைச்சர் செயல்பட வேண்டும். வன அதிகாரி ராகுலை நியமிப்பதாக இருந்தால், குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ராகுலுக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கை கைவிடப்பட்டு இருந்தால் அவருக்கு மீண்டும் பொறுப்பு தந்திருக்கலாம். வனத்துறை அமைச்சர், தலைமைச் செயலரின் முடிவில் இருந்து, தான் மாறுபட்டால் அதற்கான காரணத்தை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.முதல்வராக இருப்பதாலேயே அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா,”இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பி மாநில அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

The post நினைத்ததை எல்லாம் செய்யும் மன்னராட்சி காலத்தில் நாம் இல்லை : உத்தராகண்ட் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Uttarakhand ,TEHRADUN ,Rahul ,Carpet Tigers Sanctuary ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...