×

நெல் கொள்முதல் விலையை உயர்த்தி சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: நெல் கொள்முதல் விலையை உயர்த்தி, சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் கொள்முதல் அளவு 34.96 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. இது கடந்த 2022-23ம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவான 44.22 லட்சம் டன்னை விட 9.26 லட்சம் டன், அதாவது 21% குறைவு ஆகும்.

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் அளவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த ஆண்டில் தனியார் நெல் வணிகர்கள் குவிண்டாலுக்கு ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை கொள்முதல் விலை வழங்கியதுடன், உழவர்களின் களத்துக்கே சென்று நெல்லை கொள்முதல் செய்தனர்.

அதனால், உழவர்களுக்கு கைமீது அதிக தொகை கிடைத்ததால் பெரும்பான்மையான உழவர்கள் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்தனர். அரசின் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதுவும் முக்கியக் காரணம் ஆகும். தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். எனவே, உழவர்கள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நெல் கொள்முதல் விலையை உயர்த்தி சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Tamil Nadu government ,CHENNAI ,BJP ,President ,Anbumani Ramadoss ,Tamil Nadu ,
× RELATED கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல்,...