×

ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய சின்னம், பெயரை பயன்படுத்தினால் சிறை: சட்ட திருத்தம் செய்ய திட்டம்

புதுடெல்லி: தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்தி அவமதித்ததால் சிறை தண்டனையும் கடும் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கடந்த 1950ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, தேசியக் கொடி, அரசு முத்திரை, அரசு சின்னங்கள், அவற்றில் இடம் பெற்றுள்ள வாக்கியங்கள், பெயர்களை வர்த்தக மற்றும் தொழில் நோக்கத்திற்காக ஒன்றிய அரசின் அனுமதியின்றி பயன்படுத்துவது தவறு. ஆனால் தற்போதைய சட்டத்தின் கீழ், பிரிவு 3ல் குறிப்பிட்டுள்ளபடி, சில சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம் வெறும் ரூ.500 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

எனவே இச்சட்டத்தின் தண்டனைகள் போதுமானதாக இல்லாததால், சட்ட திருத்தம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் முறை தவறு செய்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், மீண்டும் சட்டத்தை மீறுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க நுகர்வோர் விவகார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு அமைச்சகத்தின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படும் பட்சத்தில் 74 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டத்தில் கொண்டு வரப்படும் முதல் திருத்தமாக இருக்கும்.

The post ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய சின்னம், பெயரை பயன்படுத்தினால் சிறை: சட்ட திருத்தம் செய்ய திட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED ஜிஎன்எஸ்எஸ் மூலம் தனியார்...