×
Saravana Stores

பெரியாறு பாசன சீல்டு கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை : பெரியாறு பாசன சீல்டு கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர்,சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் பெரியாறு பாசன நேரடி ஆயக்கட்டில் சுமார் 143 கண்மாய்கள் உள்ளது. பெரியாறு கால்வாயில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 1925ம் ஆண்டு சீல்டு மண் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மதுரை மாவட்டம் குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்கி, சிவகங்கை மாவட்டம் சாலூர் பூக்குழி கண்மாயில் முடிவடைகிறது.

எட்டு கி.மீ நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இக்கால்வாயில் கடந்த 2ஆயிரமாவது ஆண்டில் ரூ.48லட்சத்தில் குறிச்சிப்பட்டி கண்மாய் காரமடை முதல் கண்மாய் கழுங்கு வரை சுமார் ஒரு கி.மீ தூரம் கண்மாயின் மேற்பகுதியில் பைபாஸ் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாயால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்து 800ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

மழைநீர் திறக்கும் நேரத்தில் அதிகப்படியான நீர் வீணாவதால் சீல்டு மண் கால்வாயை, சிமெண்ட் கால்வாயாக அமைக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு சீல்டு கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றியமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கால்வாய் அமைப்பதற்கான கணக்கீட்டு பணி நடந்தது. கருத்துரு தயார் செய்து, ரூ.21.96கோடிக்கு திட்ட மதிப்பீடும் பொதுப்பணித் துறை சார்பில் சென்னை வடிவமைப்பு கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 2018ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ரூ.22கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் மீண்டும் கடந்த 2022ம் ஆண்டு ஜூனில் சீல்டு கால்வாய் ரூ.22 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய செலவினத்தை கணக்கில் கொண்டு ரூ.27 கோடியில் நபார்டு வங்கி நிதி மூலம் சீல்டு கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கான்கிரீட் கால்வாயாக மாற்றும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரியாறு கால்வாய் பாசன விவசாயிகள் கூறியதாவது:பெரியாறு கால்வாயில் நீர் திறந்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு எவ்வளவு பங்கு நீர் வழங்க வேண்டும். சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என 2016ம் ஆண்டிலேயே நீதிமன்றம் உத்தரவிட்டும், தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டும் வேறு எந்த பணிகளும் தொடங்கப்பட வில்லை.

இந்நிலையில் ரூ.27 கோடியில் கால்வாய் கட்டுமானப்பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவாக இத்திட்டத்திற்கு டெண்டர் உள்ளிட்ட பணிகளை தொடங்கி பணியை முடிக்க வேண்டும். இதனால் பெரியாறு பாசன விவசாய நிலங்கள், கால்நடைகள், குடிநீர் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

The post பெரியாறு பாசன சீல்டு கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Periyar ,Sivaganga ,Sivagangai District ,Tiruppattur ,Sivagangai ,Tiruppuvanam taluk ,Periyar Irrigation Direct Commission ,
× RELATED தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவகங்கை...