×

கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) : உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையை அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளை “கிருஷ்ண ஜெயந்தி’’ என்றும் “கோகுலாஷ்டமி’’ என்றும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

சசிகலா: மனிதகுலம் முறையாக வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளை, எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையிலான கருத்துகளுடன் ஞானரசமாம் பகவத் கீதையை இந்த உலகத்திற்கு உபதேசித்த பரமாத்மா ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் தீயவை அகன்று, நன்மை செழித்து அனைவரும் ஒற்றுமையோடும்மகிழ்ச்சியோடும் வாழவேண்டும் என ஸ்ரீகிருஷ்ண பகவானை மனதார வேண்டுகிறேன்.

டிடிவி தினகரன்: ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில் தர்மம் செழிக்கவும் அறம் வளரவும் அனைவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கவும் மீண்டும் ஒருமுறை எனது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகள்.

எர்ணாவூர் நாராயணன்: தங்கள் வீடுகளில் கிருஷ்ணர் கால் தடங்கள் வைத்து மகிழ்கின்றனர். பலனை எதிர்பாராமல் கடமையை செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெறலாம் என்ற கிருஷ்ணரின் கீதை உபதேசத்தை நெஞ்சில் நிறுத்தி கிருஷ்ண ஜெயந்தி நாளில் உறுதி ஏற்போம்.

எம்.வி.சேகர் யாதவ்(கோகுல மக்கள் கட்சி நிறுவனர்) : ஆயர் குலத்தில் பிறந்து யசோதை மடியில் தவழ்ந்து ஆச்சரியங்கள் பல புரிந்த கோகுலத்தின் குலவிளக்கு உலகெங்கும் தீமைகளை அழித்து தர்மம் தழைத்து நிலைக்க செய்த கீதையின் நாயன்கன் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த இத்திருநாளை கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

The post கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti ,Chennai ,Edappadi Palaniswami ,General Secretary of ,ADMK ,Lord Sri Krishna ,Krishna ,Kokulashtami ,
× RELATED கிருஷ்ண ஜெயந்தி: தலைவர்கள் வாழ்த்து